மயிலம் அருகே பரிதாபம் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 9 வயது பள்ளி சிறுவன் பலி

மயிலம், பிப். 25: மயிலம் அருகே சின்ன நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் (41). இவருக்கு குருஷித் (9), இனியா (11) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனது 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு ஆட்டோ சவாரிக்காக வெளியில் சென்று விட்டார். அதேபோல் இவரது மனைவி உமாமகேஸ்வரியும் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் வேலைக்கு சென்ற உமா மகேஸ்வரி மாலை வீட்டுக்கு வந்து தனது குழந்தைகளை தேடியபோது இனியா மட்டும் வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். குருஷித் மாயமாகி இருந்ததால் அவரை ஊர் முழுக்க தேடியுள்ளனர். நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் தனது வீட்டின் அருகில் உள்ள புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டி ஒன்றில் சென்று பார்த்தபோது தண்ணீர் தொட்டியில் சிறுவனின் உடல் மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சிறுவனின் உடலை தூக்கிக் கொண்டு கேணிப்பட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலம் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: