*தென்னக ரயில்வே நடவடிக்கை
திருவாரூர் : திருவாரூர் அருகே கீழகூத்தங்குடி ரயில்வே கீழ் பாலத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் தென்னக ரயில்வே மூலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருவாரூரிலிருந்து திருத்துறைபூண்டி மற்றும் பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி செல்லும் மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு ரயில் சேவை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளின் போது ஏற்கனவே மீட்டர் கேஜ் பாதையில் இருந்த ரயில்வே கேட்டுகள் சில இடங்களில் குறைக்கப்பட்டும், சில இடங்களில் ரயில்வே கீழ்பாலங்களாகவும் மாற்றப்பட்டன.
அதன்படி திருவாரூர் அருகே கீழகூத்தங்குடி கிராமத்தில் ஏற்கனவே மீட்டர் கேஜ் பாதையின் போது ரயில்வே கேட் ஒன்று இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது அந்த இடத்தில் கேட்டிற்கு பதில் ரயில்வே துறையினர் மூலம் கீழ் பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தையொட்டியவாறு காட்டாறு இருந்து வரும் நிலையில் மழை காலங்களில் பாலத்தில் தேங்கும் நீர் ஆற்றில் வடிவதற்காக ஓட்டைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் பாலத்திலிருந்து நீர் வடிவதற்கு பதில் ஆற்று நீர் உள்ளே புகும் நிலையில் இருந்து வருகிறது.
இதன் காரணமாக அந்த பகுதியில் வசித்து வரும் சுமார் 20க்கும் மேற்ப்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மழை காலங்களில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த கீழ் பாலத்திற்கு பதில் ஏற்கனவே இருந்தவாறு ரயில்வே கேட் அல்லது மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்துடன் பல முறை போராட்டத்திலும் ஈடுப்பட்டதால் மாற்று ஏற்பாடாக கீழ்பாலத்தில் மழைநீர் தேங்காதவாறும், காட்டாற்றிலிருந்து நீர் உட்புகாதாவாறும் பாலத்தை உயர்த்தும் பணி தென்னக ரயில்வே மூலம் கடந்த 2024ம் ஆண்டில் நடைபெற்றது.
இருப்பினும் தற்போதும் மழைகாலத்தில் அங்கு மழைநீர் தேங்குவதால் நீர் உட்புகாத வகையில் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
