திருப்பரங்குன்றம் முருகராவது மோடிக்கு நல்லபுத்தி கொடுக்கட்டும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

பெரம்பூர்: திருவிக.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6இடங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை துவக்கி வைத்தார். சென்னை திருவிக.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 71 வது வார்டு பெரம்பூர் நெல்வயல் சாலையில் நூலகம் கட்டும் பணி, 72வது வார்டு பகுதியில் பழைய வெங்கடேசபுரம், வஉசி. நகரில் பல்நோக்கு மையக் கட்டிடம் கட்டும் பணி, 73வது வார்டு கிரே நகர், பழைய வாழை மாநகரில் உடற்பயிற்சி கூடம்,பூங்கா கட்டும் பணி, 75வது வார்டு சிவசண்முகபுரம் பகுதியில் பல்நோக்கு மையம் கட்டிடம் கட்டும் பணி, 75வது வார்டு தலைமைச்செயலக காலனி பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, 76 வது வார்டு ஸ்டாரன்ஸ் சாலை மற்றும் கே.எம்.கார்டன் பகுதியில் பல்நோக்கு மைய கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை இன்று காலை அமைச்சர் பி.கே. சேகர்பாபு துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ, பகுதி செயலாளர்கள் தமிழ்வேந்தன், சாமிக்கண்ணு, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; திருப்பரங்குன்றத்துக்கு பிரதமர் மோடி செல்கிறாரே? திருப்பரங்குன்றம் முருகராவது மோடிக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும். திமுகவில் ஓபிஎஸ் இணைந்து அதிமுகவுக்கு நல்ல காலம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கூறி இருக்கிறார்களே? வலுவிழந்தவர்களின் வார்த்தைகள் அப்படித்தான் இருக்கும். எனவே அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: