சென்னை: தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே நாளை முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவையில் கடந்த 20ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 5ம் தேதி வரை தொடர்ந்து 45 நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில் தாம்பரத்திலிருந்து, சென்னை கடற்கரைக்கு செல்லும் வழித்தடங்கள் மற்றும் செங்கல்பட்டு நோக்கி செல்லும் வழித்தடங்களில் 208 மின்சார ரயில்கள் இரு மார்க்கமாகவும் இயக்கப்பட்ட நிலையில், 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இரு மார்க்கத்திலும் 164 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் சென்னை புறநகர் பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அவசர தேவைக்காக செல்பவர்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு இடையே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
அலுவலக நாட்கள் மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் அதிக அளவிலான கூட்டம் காணப்படுகிறது. ரயில்கள் ரத்தால் பல்வேறு ரயில் நிலையங்களிலும், ரயில்கள் காலதாமதமாக வந்து செல்கின்றது, இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே நாளை முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே ஒரு மணி நேரத்தில் 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படும். பயணிகள் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. எழும்பூர், கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் விரைவு மின்சார ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
