அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கை முறைப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி

 

சென்னை: அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கை முறைப்படுத்த அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் அரசு 3 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் நெறி முறைகளை ஏற்றுள்ள நிலையில் மனுதாரர் கட்சி மட்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களை முறைப்படுத்த தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக்கோரி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நெறிமுறைகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளித்து, புதிய, சிறிய கட்சிகளின் செயல்பாடுகளை முடக்குவதாக தவெக குற்றம் சாட்டியுள்ளது. தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். கரூரில் தவெக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த புதிய விதிகள் உருவாக்கப்பட்டன.

புதிய வழிகாட்டு நெறிமுறைகள், பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளைப் பாரபட்சமாக நடத்துவதாகவும், தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவதில் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் தவெக குற்றம் சாட்டியது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கூட்டங்களை முறைப்படுத்த நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், ஜனவரி 5ஆம் தேதி அன்று தமிழக அரசின் 47 பக்கங்களை கொண்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. இந்த நெறிமுறைகளின் படி, பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலம் நடத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 10 முதல் 30 நாட்களுக்கு முன்பே ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அல்லது அந்தப் பகுதி காவல்துறை ஆணையாளர், கண்காணிப்பாளர் இதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

ஓரிடத்தில் எத்தனை பேர் கூடலாம் என்பதை பொதுப்பணித்துறை அதிகாரி குறிப்பிட வேண்டும். அந்த எண்ணிக்கைக்கு மேல் ஆட்கள் சேரக்கூடாது. கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு போதுமான அளவு நடமாடும் கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகளை கட்சியினர் செய்திருக்க வேண்டும். ஆம்புல்னஸ் வசதி, முதலுதவி சிகிச்சை முகாம் மற்றும் அவசர கால வெளியேறும் வழிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளது

இந்நிலையில் தவெக சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தவெகவுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அரசு தரப்பில் கரூர் நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து ஐகோர்ட் உத்தரவுபடி, வகுத்த வழிகாட்டுதல்களில் என்ன தவறு உள்ளது. சேலத்தில் வெயில் காரணமாக ஒருவர் இறந்த பிறகுதான், வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் மேற்கூரை அமைத்துள்ளனர் என்று அரசு கூறியுள்ளது.

வருமான வரி விலக்கு பெறுவதற்கான பல கட்சிகள் காளான்கள்போல தொடங்கப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். பல தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., எம்.பி.க்களை கொண்ட கட்சிகளுக்கு முன்னுரிமை தருவதில் என்ன தவறு என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பங்களை பெறுவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது என்று வழக்கு தொடர்பாக அரசு மூன்று வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

 

 

Related Stories: