சென்னை: தேர்தல் தேதி அறிவிப்பு வந்த பிறகே பிரசாரத்தை தொடங்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். விஸ்வநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் பொது அரசியல் எதிரியை வீழ்த்துவதற்காக சுயநல நோக்கில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன் கூட்டணி அமைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அதனால் அனைத்து கட்சிகளும் தனித்தனியே போட்டியிட வேண்டும் எனவும், தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்க கூடாது எனவும் அறிவுறுத்தல்கள் வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பு பெரிய கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதால், அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் பிரசாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகு 13 நாட்கள் தான் பிரசாரத்துக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. அந்த காலக்கெடுவுக்குள் சிறிய கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்களால் சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியாது. இந்த சமமற்ற நிலையை நீக்க, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகே பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
