முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் உருவச்சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன், மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை, சாமிநாகப்பன் படையாட்சி, வை.நாடிமுத்துப்பிள்ளை உருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 2024-25ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்பு துறையின் மானியக் கோரிக்கையில், ஆசிரியராக பணிபுரிந்த மிகப்பெரும் கல்வியாளரும், பல்கலைக்கழக ஆணையத்தின் தலைவராக திகழ்ந்தவரும், பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கல்வி துறையில் சிறப்பான கொள்கைகளை வகுத்தவரும், சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவராக விளங்கியவருமான பாரத ரத்னா சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதேபோன்று 2022-23ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்துக்கு மயிலாடுதுறையில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையில் ரூ.4.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சிலை மற்றும் அரங்கத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

16.7.2025 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தென்னாப்பிரிக்காவில் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் கலந்துகொண்டு, உயிர்த் தியாகம் செய்த, சுதந்திரப் போராட்ட தியாகியான சாமிநாகப்பன் நினைவை போற்றும் வகையில், மயிலாடுதுறையில் அவரின் சிலை அரசால் நிறுவப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி சாலை, நகர்ப்புற நலவாழ்வு மைய வளாகத்தில் சுதந்திர போராட்ட தியாகி சாமிநாகப்பன் படையாட்சிக்கு ரூ.44 லட்சத்து 40 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.

இந்திய விடுதலை போராட்டத்தில் பங்குகொண்டு சிறை சென்றவரும். பொதுமக்களால் தென்னாட்டு ஜவகர் என்று அழைக்கப்பட்டவருமான பட்டுக்கோட்டை தியாகி வை.நாடிமுத்துப்பிள்ளைக்கு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, நாடியாம்மாள்புரத்தில் சுதந்திர போராட்ட வீரர் நாடிமுத்துப்பிள்ளைக்கு ரூ.38 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிலையை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், சேலத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சேலம் சிறையில் உயிர்நீத்த 22 தியாகிகளின் நினைவுத் தூண் மண்டபத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: