சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 26ம் தேதி (இன்று) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9ம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போதுள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பிக்களையும், அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும். தமிழகத்தை பொறுத்தவரை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் சென்னை, தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு வாங்கி விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5ம் தேதி கடைசி நாளாகும்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டி இருந்தால் வாக்குப்பதிவு மார்ச் 16ம் தேதி நடைபெறும். அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மாநிலங்களவை சீட் விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
