திருச்செந்தூர்: திருச்செந்தூரில் மாசித் திருவிழா ஆறாம் நாளான இன்று காலை சுவாமி குமரங்கப்பெருமான் கோ ரதத்தில் வீதி உலா வந்தார். இரவு சுவாமி வெள்ளித்தேரிலும், அம்மன் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கடந்த பிப். 21ம்தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியருள்கின்றனர்.
ஆறாம் திருவிழாவான இன்று காலை சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் மற்றும் பக்தர்கள் கோ ரதத்தை இழுத்தனர். இன்று இரவு மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளித்தேரிலும், தெய்வானை அம்மன் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
ஆறாம் திருநாளன்று திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து சுவாமியை வழிபட்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
