புவனேஸ்வர்: ஊழல் வழக்கில் கைதான ஒடிசா சுரங்கத்துறை அதிகாரி வீட்டில் டிராலி பெட்டிகளில் கட்டு கட்டாக அடுக்கப்பட்ட ரூ.4.27 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் சுரங்கத்துறை துணை இயக்குநராக பணியாற்றுபவர் தேபப்ரதா மொஹந்தி. இவர் உரிமம் வழங்க நிலக்கரி விற்பனையாளரிடம் ரூ.30 ஆயிரம் லட்சம் பெற்ற போது சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, மொஹந்தியின் புவனேஸ்வர் அடுக்குமாடி குடியிருப்பு, பத்ராக் மாவட்டத்தில் உள்ள அவரது பெற்றோர் வீடு, கட்டாக்கில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
இதில், மொஹ்தியின் புவனேஸ்வர் வீட்டில் டிராலி பெட்டியில் கட்டு கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை நோட்டு எண்ணும் மெஷின் வைத்து பல மணி நேரம் அதிகாரிகள் எண்ணினர். மொத்தம் ரூ.4.27 கோடி ரொக்கம் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை ஒடிசா மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஊழல் பணத்தில் இதுதான் அதிகம். இதற்கு முன், 2022ல் கஞ்சம் மாவட்டத்தில் சிறுநீர்ப்பாசன பிரிவில் உதவி பொறியாளர் வீட்டில் ரூ.3.4 கோடி லஞ்ச பணம் சிக்கியதே சாதனையாக இருந்தது.
இதுமட்டுமின்றி மொஹந்தியின் அலுவலக டிராயரில் ரூ.1.20 லட்சம் கைப்பற்றப்பட்டது. அவரது பெயரில் 10 வங்கி கணக்குகள் மற்றும் லாக்கர் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதிலும் அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர். கடந்த 2004ல் ரூ.8,000 சம்பளத்தில் ஜூனியர் அதிகாரியாக சுரங்கத் துறையில் வேலைக்கு சேர்ந்த மொஹந்தி, 22 ஆண்டுகளில் பல கோடி சம்பாதித்துள்ளார். ஏற்கனவே 2009ல் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.பாஜ ஆட்சி நடக்கும் அரியானாவில் இரட்டை இன்ஜின் அரசின் லட்சணம் இதுதான் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் மாநில தலைவர் பக்த சரண் தாஸ் விமர்சித்துள்ளார்.
