சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் சுமார் 8,400 பள்ளிகள் இயங்கி வருகிறது. இப்பள்ளிகளில் சுமார் 28.44 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு, அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிடைப்பதில்லை. புதுமைப் பெண் திட்டம் மூலம் கிடைக்கும் ரூ.1,000 நிதி உதவி மாணவிகளுக்கு கிடைப்பதில்லை. காலை உணவு திட்டத்தில் ஆரம்பத்தில் நிதி உதவிபெறும் பள்ளிகள் இணைக்கப்படாமல் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் சிறப்பு திட்டங்களான மாதிரிப்பள்ளி, டிஜிட்டல் கிளாஸ், உள் கட்டமைப்பு உள்ளிட்டவைகள் நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை.
நீட் தேர்வில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பில் அண்மையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு துறையினர் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து போராடும் வேளையில், தாங்கள் பணியாற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் போராடுவது வரவேற்கதக்கது. எனவே தமிழக அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு அளிக்கும் அனைத்து சலுகைகள், திட்டங்களிலும் இணைப்பதே ‘தமிழ்நாட்டில் யாரையும் பின்தங்க விடமாட்டோம்’ என்ற முழக்கத்திற்கு பொறுத்தமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
