சென்னை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரிகளை உயர்த்துவோம் என்று அதிமுக மூன்றாம் கட்டத் தேர்தல் வாக்குறுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் கருணைத்தொகையும் வழங்கப்படும் என தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மூன்றாவது கட்ட தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதிமுக சார்பில் அளிக்கப்படும் மூன்றாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகள் வருமாறு:
* திமுக ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம்போல் ஏறி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், மக்களின் அன்றாடக் குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.
* வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000; +2 வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000, உதவித் தொகையாக வழங்கப்படும்.
* மீன்பிடித் தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை ரூ.8,000ல் இருந்து ரூ.12,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ.1,000 வழங்கப்படும்.
* கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும்; விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
* நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; அனைத்து குடும்பங்களுக்கும் கருணை அடிப்படையில் ஒருமுறை மட்டும் ரூ.10,000 வழங்கப்படும். நிதித்துறை நிபுணர்கள் மூலமாக எந்தெந்த வகையில் வரியை உயர்த்த முடியுமோ அதை உயர்த்தி நாங்கள் அறிவித்த திட்டங்களுக்கு தேவையான நிதியைப் பெற்றுத் திட்டங்களைச் செயல்படுத்துவோம். படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்கள் மன உளைச்சல் இல்லாமல் இருக்க முதல் கட்டமாக இந்த உதவித்தொகை வழங்குவோம். உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு வென்டிலேட்டர் வைப்பது போன்று, மக்களுக்கு இந்தக் கருணைத் தொகையை வழங்குகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்கனவே அமைக்கப்பட்டது. அதில் அதிமுக சேர்ந்துள்ளது. ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தவர்களெல்லாம் பாஜ மூலம் இடங்களை பெறுவோம் என்று கூறியுள்ளார்கள்; வேறு ஒன்றும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
