×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மமக, மதிமுகவுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு: சுமுகமாக நடந்ததாக தலைவர்கள் பேட்டி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுகவுடன் மமக, மதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது. முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தலைவர்கள் பேட்டியளித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில் ஆளுங்கட்சியான திமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமையிலான குழுவினர் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 1 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் காதர் மொகிதீன், முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து, நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய 7 பேர் அடங்கிய குழுவுடன் மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. மமக தலைவர் எம்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமையிலான பொதுச்செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, பொருளாளர் கோவை உமர், பேராசிரியர் ஹாஜா கனி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.

பின்னர் மமக தலைவர் ஜவாஹிருல்லா அளித்த பேட்டி: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் மற்றும் மணப்பாறை இரண்டு தொகுதியில் நின்றோம். நூறு விழுக்காடு வெற்றி பெற்றோம். இந்த முறை ஐந்து தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு தர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளோம். முதல்கட்ட பேச்சு வார்த்தை தான் இன்று (நேற்று) முடிவடைந்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி முடிவெடுப்போம் என தெரிவித்து இருக்கிறார்கள். இந்த சட்டமன்ற தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். கூடுதலாக தொகுதியை தான் கேட்டுள்ளோமே தவிர உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து திமுக மதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் மதிமுக சார்பில் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், உயர்நிலை குழு உறுப்பினர் சு.ஜீவன், தேர்தல் பணி செயலாளர் வி.சேஷன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் அளித்த பேட்டி: பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக நடைபெற்றது. எங்களுடைய வேண்டுகோளையும், கோரிக்கைகளையும் திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் சமர்ப்பித்து இருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவோம். பேச்சுவார்த்தையின் முடிவுகளை உங்களிடம் தெரிவிப்போம். சொந்தம் எப்போதும் தொடர் கதை தான். அது எப்போதும் முடிவில்லாதது. அதனால் தொடரும். ராஜ்யசபா சீட் கோரிக்கையும் வைத்துள்ளோம். கூடுதல் இடங்களும் கேட்டுள்ளோம். எத்தனை இடங்கள் என்பதை பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் சொல்கிறேன். நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அப்படி எதுவும் சொல்லவில்லை. இன்று (நேற்று) அப்படி எதுவும் வரவில்லை. எங்கள் சின்னத்தில் தனியாக தேர்தலில் நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் திமுக நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த இருந்தது. இந்த பேச்சுவார்த்தை திடீரென வருகிற 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. திமுக தொடர்ந்து வருகிற 26ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சியிடனும், 27ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதே போல கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு நடக்கிறது. இப்படி கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுடன் விரைவில் தொகுதி பங்கீட்டை முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் பட்டியலையும் வெளியிட திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : DMK ,MDMK ,Anna Arivalayam ,Chennai ,Tamil Nadu Assembly ,
× RELATED எடப்பாடி பழனிசாமி தற்போது தோல்வி...