×

சாமியார்களிடம் சரண்டராகும் இலை கட்சியினர்

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் குறி சொல்லும் சாமியார்களை தேடி அதிமுகவினர் படையெடுக்க தொடங்கியுள்ளனராம். காரணம் என்ன தெரியுமா? சீட் கிடைக்குமா? கிடைக்காதா? கிடைச்சால் வெற்றியா, தோல்வியா என கேட்பதற்குத்தான். தேனி மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 3 தொகுதிகளில் திமுக வென்றுள்ளது. போடியில் மட்டும் ஓபிஎஸ் எம்எல்ஏவாக உள்ளார். மாவட்டத்தில் அதிமுக செல்வாக்கை இழந்து வரும் சூழலிலும், இங்குள்ள அக்கட்சியின் சீனியர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் சீட்டு கேட்டு தலைமையிடம் நச்சரித்து வருகின்றனர். ‘நான் எம்ஜிஆர் காலத்து ஆளு, கட்சியின் தீவிர விசுவாசி, எடப்பாடியின் தீவிர ஆதரவாளர்’ என்றெல்லாம் கூறி சீட்டு கேட்டு வருகின்றனர்.

சீட்டு கிடைக்குமா? கிடைத்தால் வெற்றி வாய்ப்பு எப்படி என்பதை கணித்திடும் வகையில் மலைப்பகுதிகளில் உள்ள சாமியார்களை தேடி அலைகிறார்களாம். குறிப்பாக தேனி மாவட்டம் கடமலை – மயிலை ஒன்றியத்தில் வருசநாடு, உப்புத்துறை, மாளிகைப்பாறை, வாய்க்கால் பாறை மற்றும் தும்மக்குண்டு மலைப்பகுதிகளில் உள்ள குறிசொல்லும் சாமியார்களை சந்திக்க ரொம்பவே ஆர்வம் காட்டி வருகிறார்களாம். தேனி மாவட்ட அதிமுகவினர் மூலம் இந்த விஷயமறிந்த மற்ற மாவட்ட அதிமுகவினரும் இந்தப் பகுதிக்கு வரத் துவங்கியுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், கோவை, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிமுகவினர் இந்தப் பகுதிக்கு படையெடுத்து வருகிறார்கள்.

ஏற்கனவே இங்கு வந்து பயனடைந்தவர்கள், உள்ளாட்சி மற்றும் கட்சி பொறுப்பில் உள்ள அதிமுகவினர் மட்டுமின்றி சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்வந்து அருள்வாக்குப்படி பின்வாங்கியவர்கள், போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காமல் போனவர்கள் என பலரும் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். குறிப்பாக, அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களாக உள்ள சிலரும் சாமியார்களை சந்தித்து குறி கேட்டுள்ளனர். அதில், தாங்கள் மீண்டும் போட்டியிடலாமா, தலைமையிடம் வாய்ப்பு கேட்கலாமா, நம்பி தேர்தலில் செலவிடலாமா என்றெல்லாம் குறி கேட்டு வருகின்றனராம்.

முன்பெல்லாம் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்கள் பார்த்து சாமியார்களை சந்தித்து வந்த அதிமுகவினர், தேர்தல் நெருங்க, நெருங்க வாரத்தின் பல நாட்களில் இரவு நேரங்களில் அதிகளவில் வந்து, விடிவதற்குள் சாமியார்களை சந்தித்து கேட்டுவிட்டு கிளம்பி விடுகின்றனர். சிறப்பு பூஜைகளும் களைகட்டுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக வருசநாடு மலைப்பகுதிகளில் எந்நேரமும் அதிமுக கொடிகட்டிய கார்கள் வருவதும், போவதுமாக உள்ளன. அதிமுகவினரின் தொடர் படையெடுப்பால் வருசநாடு மலைப்பகுதிகளிலுள்ள சாமியார்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்…

* அமிதாப் தான் பிரதமர்… தமாகா காமெடி
ஈரோட்டில் தமாகா பொதுச்செயலாளர் யுவராஜா அளித்த பேட்டி: நடிகர் என்றால் கூட்டம் கூடுவது இயல்பு. நடிகர்களுக்கு கூடும் கூட்டத்தை வாக்காக மாறும் என சொல்ல முடியாது. விஜய் சினிமா பின்புலத்தை மட்டுமே வைத்துள்ளார். நடிகர்களுக்கு கூடும் கூட்டம் வாக்காக மாறினால், அமிதாப்பச்சன் பிரதமராகவும், ரஜினிகாந்த் முதல்வராகவும் ஆகியிருப்பார்கள். சினிமா நடிகர் கட்சி ஆரம்பித்து ஆட்சி பிடிப்பது நடக்காத விஷயம். ஆனால், கணிசமான வாக்குகள் பெறுவார். இவை பயனுள்ள வாக்குகளாக இருக்காது. இவ்வாறு யுவராஜா கூறினார்.

* அமைந்தகரையில் பாஜவின் தலைமை தேர்தல் அலுவலகம்
அதிமுக தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் பாஜ தேர்தல் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாஜவின் தலைமைத் தேர்தல் அலுவலகம் அமைந்தகரையில் உள்ள அய்யாவு மகாலில் அமைய உள்ளது. இதற்கான வேலைகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த அலுவலகத்தில் பிரசாரங்களை ஒருங்கிணைப்பது, விளம்பரத் துறை, பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, சமூக ஊடகப் பிரிவு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, சட்ட உதவி, தலைவர்கள் சுற்றுப்பயண ஏற்பாடு, அகில இந்திய தலைவர்கள் வருகை, தங்க வைத்தல், பிரசாரத்துக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்தல், வாகனங்கள் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட 30 துறைகள் அமைக்கப்பட உள்ளது.

இதுதவிர கூட்ட அரங்கம், தலைவர் அறை, முக்கிய தலைவர்கள் கலந்துரையாடும் அறை உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் இணைய வசதியுடன் கம்ப்யூட்டர் வசதிகள், முழுநேரமும் ஊழியர்கள் இடம்பெறும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற 25ம் தேதிக்குள் (நாளை) முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது வருகிற 26ம் தேதி சென்னை வரும் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் இந்த அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அலுவலகம் திறக்கப்பட்டவுடன், கட்சி அலுவலகமும் தற்காலிகமாக இங்கு செயல்படும் என்றும் கூறப்படுகிறது.

Tags : Leaf ,AIADMK ,Theni district ,Theni ,
× RELATED எடப்பாடி பழனிசாமி தற்போது தோல்வி...