×

‘துரோகிகளை வீழ்த்த பீனிக்ஸ் போல வருக…’ சசிகலாவை வரவேற்று போஸ்டர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் அருகே கோட்டைமேடு பகுதியில் இன்று (பிப். 24) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவரது தோழி சசிகலா பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதற்காக சசிகலாவை வரவேற்று மதுரை விமான நிலையம் முதல், சிந்தாமணி சுற்றுச்சாலை, விரகனூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் வரை அதிமுகவின் நிர்வாகிகள் என குறிப்பிட்டு பலதரப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘‘தீமை எனும் சூழ்ச்சியில் வீழ்த்த நினைப்பவர்களை தீயில் எழும் பீனிக்ஸ் பறவை போல் எழுந்து சூழ்ச்சியை வீழ்த்த வருக! வெல்க!!’’ என்ற வாசகமும், மற்றொன்றில் ‘‘துரோகம் மிரளும் நெஞ்சுரமே! நாளைய தமிழகமே! புரட்சி தாய் சின்னம்மா அவர்களே! வருக! வருக!’’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2026ல் துரோகிகளை வீழ்த்த வருகை தரும் என்ற வாசகத்தில், துரோகிகள் என்பது ஏற்கனவே அவர்களுடன் இருந்த யாரையெல்லாம் குறிப்பிடுகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த போஸ்டர்கள் அதிமுகவினர் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* சக்களத்தியை கூட்டிட்டுபோய் ஜாலியா இருங்க… மகளிர் உரிமைத்தொகை குறித்து சி.வி.சண்முகம் சர்ச்சை
விழுப்புரம் அருகே கோலியனூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி பேசுகையில், ‘‘பெண்கள் இந்த வெயிலில் நிற்கிறீர்களாம். வெயிலில் கருத்து சிறுத்து விட்டீர்களாம். உங்க அழகெல்லாம் போய்விட்டது என்று ரூ.2,000 வழங்கி இருக்கிறார்கள். இந்த பணத்தை வைத்துக்கொண்டு நீ (மகளிர்கள்), உங்க வீட்டுக்காரர் (கணவன்), சக்களத்தி என்று எல்லோரையும் அழைத்து கொண்டு ஊட்டி, கொடைக்கானல் சென்று பத்து நாள் குளு குளு என்று இருக்கனுமாம்.

இந்த பணத்தை வைத்து இருக்கிற மளிகை கடைக்கு கூட செல்ல முடியாது என்று தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை தொகையை திட்டத்தை நக்கல் அடித்து பேசியுள்ளார். இது அங்கிருந்த பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அண்மையில் அதிமுக பூத் கமிட்டி மீட்டிங்கில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து ஆளுக்கு ஒரு பொண்டாட்டியை இலவசமாக கொடுப்பார்கள் என்று சர்ச்சை கருத்தை பேசி இருந்தார் சி.வி.சண்முகம். இதுகுறித்து மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சி.வி.சண்முகம் மீண்டும் சர்ச்சை கருத்தை பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* மோடி வர்றாரு… பாஜ அலுவலகத்தை எப்ப சார் திறப்பீங்க!
அதிமுகவில் உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் தங்களது தொகுதிகளில் கட்சி அலுவலகங்களை திறந்து கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்திற்கு கூட்டணி கட்சியான பாஜ உள்ளிட்டோரை அழைப்பதும் இல்லை, இவர்களும் கூட்டணி என்ற அடிப்படையில் செல்லாத நிலையே உள்ளது. வரும் மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக மதுரை வருகிறார். மதுரை மண்டேலா நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் அதிமுகவினர் தரப்பில் போதிய ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. இதற்கிடையே மதுரை தெற்கு தொகுதியில் பாஜவினர் போட்டியிட முடிவு செய்து முன்னுரிமை பட்டியலும் கொடுத்துள்ளனர். ஒன்றியம், பகுதி மற்றும் கிளை அலுவலகங்களை திறந்து வரும் நிலையில் மதுரை நகரில் பீ.பீ.குளத்தில் உள்ள நகர் மாவட்ட பாஜ அலுவலகம் தொடர்ந்து பூட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் தொண்டர்கள் கூட கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். கட்சி அலுவலகத்திலேயே முக்கிய நிர்வாகிகளை பார்க்க முடியவில்லை. தொடர்பு கொள்ளவும் முடியில்லை. இதனால், மதுரையிலுள்ள பாஜ தொண்டர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர்.

* மோடி வந்தா துண்டை வீசுங்க… அதிமுகவினருக்கு முனுசாமி டிப்ஸ்
மதுரை மண்டேலா நகரில் மார்ச் 1ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர். இதற்கான ஆலோசனை கூட்டம் மதுரை எல்லீஸ் நகரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசும்போது, ‘‘மதுரையில் பிரதமர் மோடியும், எடப்பாடி பழனிசாமியும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகின்றனர். கூட்டத்தில் இருவரும் பேசும் கருத்துகளை கடைசிவரை அமர்ந்து கேட்க வேண்டும்‌. குறிப்பாக இன்றைக்கு வடமாநிலங்களில் ஒரு கலாச்சாரம் உருவாகி வருகிறது. தலைவர்கள் வரும்பொழுது, தங்கள் கட்சித் துண்டை வீசியபடி வரவேற்பு அளிக்கின்றனர். அதேபோன்று நமது அதிமுக தொண்டர்களும் நம் கட்சித் துண்டை வீசியபடியும், அனைவரும் கழுத்தில் அணிந்து வந்தும் வரவேற்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Sasikala ,Chief Minister ,Jayalalithaa ,Kottaimedu ,Kamudi Pasumpon ,Ramanathapuram district ,Madurai Vimana ,Sasikala… ,
× RELATED எடப்பாடி பழனிசாமி தற்போது தோல்வி...