தள்ளி விடப் பார்க்கும் தேஜகூ: திக்கு தெரியாத கிருஷ்ணசாமி

மதுரை: புதிய தமிழகம் கட்சி அதிமுக, பாஜ அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அதிமுக-பாஜ கூட்டணியில் பாமக அன்புமணி அணி, ஜிகே.வாசனின் தமாகா, ஜான்பாண்டியனின் தமமுக, ஏசி சண்முகத்தின் புதிய நீதிகட்சி போன்றவை அந்த அணியில் இடத்தை உறுதி செய்து விட்டன. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நடத்தத் தொடங்கி விட்டன. ேதசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கனவே புதிய தமிழகம் கட்சி இருந்து வருகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தபோதும் செல்லும் இடமெல்லாம், ‘விரைவில் கூட்டணி குறித்து’ அறிவிப்பு வெளியிடப்படும் என கிருஷ்ணசாமி கூறி வருகிறார். மேலும், கூட்டணி ஆட்சி வேண்டும் என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தி வருகிறார். தேஜ கூட்டணியில் தொடர்வதை கிருஷ்ணசாமி உறுதிப்படுத்தாமலேயே இருக்கிறார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது போல பேசுவதால், தேஜ கூட்டணியில் இவரை கழற்றி விட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ஜான்பாண்டியன், தேஜ கூட்டணியில் இருப்பதால் அவர் மூலமாக வரும் சமுதாய மக்களின் ஓட்டு வங்கி போதும் என பாஜ நினைத்து வருவதால் புதிய தமிழகம் வெளியேறிச் செல்லட்டும் என்ற நிலையே உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தவெக கூறி வந்தாலும், அக்கட்சி சார்பில் புதிய தமிழகம் கட்சிக்கு இதுவரை அழைப்பு விடப்படவில்லை. இதையெல்லாம் வைத்து பார்த்தால் புதிய தமிழகத்தின் தற்போதைய நிலை திரிசங்கு நிலையில் உள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: