சென்னை: மதிமுகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக அக்கட்சியின் அவைத் தலைவர் அர்ஜூனராஜ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு சார்ந்த பேச்சுவார்த்தையை நேற்று தொடங்கியது. இந்நிலையில், இன்று மதிமுக உடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை சேர்ந்த டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்றனர். மதிமுக குழுவில் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், உயர்நிலைக் குழு உறுப்பினர் சு.ஜீவன், மதிமுக தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக. அவைத் தலைவர் அர்ஜூனராஜ், “இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடைபெற்றது. எங்களது கோரிக்கைகளை தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவினரிடம் சமர்ப்பித்து இருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் அவர்களை சந்தித்த பிறகு பேச்சுவார்த்தையின் முடிவுகளை தெரிவிக்கிறோம். சொந்தம் எப்போதும் தொடர் கதை தான். அது முடிவில்லாதது. அதனால் தொடரும். ராஜ்யசபா எம்.பி. சீட் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம். கூடுதல் தொகுதிகளும் கேட்டுள்ளோம். தொகுதிகள் பட்டியலை இன்னும் அவர்களிடம் கொடுக்கவில்லை. இந்த தேர்தலில் நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவோம்,”என்றார்.
