சுரங்கம் தந்த 3 எம்எல்ஏக்கள்: மோத தயாராகும் சொரத்தூர் உறவுகள்

கடலூர்: கடந்த 2008ல் நடந்த தொகுதி மறுசீரமைப்புபின் உருவானது நெய்வேலி சட்டமன்ற தொகுதி. பண்ருட்டி, குறிஞ்சிப்பாடியுடன் இருந்த 42 ஊராட்சிகளை உள்ளடக்கி புதிதாக இத்தொகுதி உருவெடுத்தது. தென்இந்தியாவிற்கே மின்சாரம் வழங்கும் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இடம்பெற்றுள்ள இத்தொகுதியில் வட மாநிலத்தவர் அதிகளவில் பணிபுரிவதால் ஸ்டார் தொகுதிக்கு நிகராகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2011ல் இங்கு முதன்முறையாக அதிமுக சிவசுப்பிரமணியன் எம்எல்ஏ ஆனார்.

அடுத்து 2016ல் திமுக சார்பில் நின்று வென்ற சபா ராஜேந்திரன் 2021 பொதுத்தேர்தலிலும் தொழிலாளர் வர்க்கத்தினரின் ஆதரவோடு தொடர்ந்து 2வது முறையாக வெற்றிவாகை சூடினார். தற்பொழுது தொகுதிவாசிகளின் நன்மதிப்பை பெற்றவராக சபா ராஜேந்திரன் விளங்கும் நிலையில், இங்கு அதிமுக சார்பில் களமிறங்க மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையிடம் சீட் கேட்டுள்ளதாக தெரிகிறது. கூட்டணி கட்சியான பாமகவில் முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி தொகுதி மாறி நிற்க சீட் கேட்டுள்ளார். பாஜகவில் மாநில செயலாளர் அஸ்வத்தம்மன், என்எல்சி தொழிற்சங்கம் வீரவன்னிய ராஜா வாய்ப்பு கேட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதுதவிர தவெகவில் வழக்கறிஞர் யாஸ்மின், நெய்வேலியில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி சபியுல்லா போட்டியிட கட்சி தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் தவாக தலைவர் வேல்முருகனும் இந்த முறை நெய்வேலியை விரும்புவதாக தகவல்கள் கசிகிறது.

இருப்பினும் தற்போதை கள நிலவரப்படி திமுக சபாவை எதிர்த்து அதிமுகவில் ராஜேந்திரன் களமிறங்கவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, மாமன் உறவுமுறை கொண்டவர்கள் என்பதால், தேர்தல் மோதலில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது என தொகுதிவாசிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 2021 தேர்தலில் நெய்வேலியில் திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரன் போட்டியிட்டு வென்றார். இதேபோன்று திமுக கூட்டணியில் அங்கம் வகித்த தவாக நிறுவன தலைவர் வேல்முருகன் பண்ருட்டியில் களமிறங்கி வெற்றி வாகை சூடினார்.

விருத்தாசலம் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். இவர்கள் தேர்வு செய்யப்பட்டது என்னவோ நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம் தொகுதிகளாக இருந்தாலும் 3 பேருமே நெய்வேலியை பூர்வீகமாக கொண்டவர்கள். வேல்முருகனின் சொந்த ஊர் புலியூர் கிராமம். சபா.ராஜேந்திரனின் சொந்த கிராமம் சொரத்தூர். ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர் முத்தாண்டிக்குப்பம். இந்த 3 ஊர்களுமே நெய்வேலி தொகுதியில் வருகிறது. இவர்கள் 3 பேருமே திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக தேர்வானவர்கள். இதனால் நெய்வேலியானது 3 எம்எல்ஏக்களை பெற்ற தொகுதியாகவே பொதுமக்களால் பார்க்கப்படுகிறது.

Related Stories: