மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க ரூ.2.28 கோடியில் 23 வாகனங்கள்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

 

சென்னை: சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் 23 புதிய வாகனங்களை மேயர் பிரியா பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவது மற்றும் சாலைகளில் படுத்துக்கிடப்பதால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்லும் பலர் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர். இதுபோன்ற விபத்தில் பலர் காயமடைகின்றனர். அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

அதனால் கால்நடைகளை வளர்ப்பவர்கள், தங்கள் கால்நடைகளை வெளியில் விடுவது தடுக்கப்பட வேண்டும் என்ற வகையில், அதன் உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை சென்னை மாநகராட்சியில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கால்நடைகளுக்கு மைக்ரோசிப் பொருத்தவும் திட்டமிட்டு இருந்தது. இதை தொடர்ந்து, கால்நடைகளை பதிவு செய்வது, மைக்ரோசிப் பொருத்தும் பணிகளை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

இதையடுத்து சென்னை அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ள நவீன மாட்டு கொட்டகைகளில் 160 மாடுகளை பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மைக்ரோசிப்கள் கால்நடைகளின் காதின் அடிப்பகுதியில் பொருத்தப்படும். மேலும், கால்நடை மற்றும் அதன் உரிமையாளரின் விவரங்கள், அவற்றின் ஆதார் எண்ணுடன் இணைத்து பதிவு செய்யப்படும்.

இந்த மைக்ரோசிப் பொருத்தும் பணிக்காக மாநகராட்சி எந்த கட்டணமும் வசூலிக்காது. மைக்ரோசிப் பொருத்தப்பட்ட பசு மற்றும் எருமைகள் சாலையில் வழிதவறி கிடப்பது கண்டறியப்பட்டால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதன் காதில் பொருத்தப்பட்டுள்ள சிப்களை ஸ்கேன் செய்வார்கள். அதன் மூலம் பெறப்படும் விவரங்களை கொண்டு அதன் உரிமையாளரை கண்டுபிடித்து விவரங்களை பதிவு செய்வார்கள்.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களில் உள்ள நவீன மாட்டு கொட்டகைகளில் கால்நடைகளின் மைக்ரோசிப் மற்றும் பதிவு செய்யப்படுகிறது. இந்த பணிகள் முடிந்ததும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணிகளை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பணிகள் மார்ச் 18ம் தேதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராயபுரத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் கட்டியுள்ள மிகப்பெரிய மாட்டுக் கொட்டகையில் 550 பசுக்கள் மற்றும் எருமைகள் தற்போது உள்ளன. இந்த நவீன மாட்டுக் கொட்டகையில் கால்நடைகளை தங்க வைக்க அதன் உரிமையாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.10 செலுத்த வேண்டும். தண்டையார்பேட்டை, பெருங்குடி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மண்டலங்களில் நவீன மாட்டுக் கொட்டகைகள் கட்டும் பணிகள் பிப்ரவரி மாத இறுதிக்குள் முடிவடையும். மார்ச் மாத இறுதிக்குள் சென்னை நகரம் முழுவதும் 17 நவீன மாட்டுக் கொட்டகைகளை நிர்வாகம் திறக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் 23 புதிய வாகனங்களை மேயர் பிரியா பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க பயன்படுத்தப்படும் வாகனங்களில் கழிவு செய்யும் நிலையில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு மூலம் இயங்கும், ரூ.2.28 கோடி மதிப்பீட்டில், கால்நடைகள் பிடிக்கும் 8 புதிய வாகனங்களை மேயர் பிரியா நேற்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இதேபோல், பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் அண்ணாநகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிக்காக எச்.டி.எப்.சி. வங்கியின் சார்பில் 10 மூன்று சக்கர மின்கல வாகனங்கள் மற்றும் பெடரல் வங்கியின் சார்பில் 5 மூன்று சக்கர மின்கல வாகனங்ளும் என மொத்தம் 23 வாகனங்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பூங்காக்கள், பொது இடங்களில் சுற்றுப்புற சூழலை மேம்படுத்திடும் வகையிலும் அழகுபடுத்திடும் வகையிலும் தன்னார்வலர்கள் மூலமாக சூரிய காந்தி விதைகள் நடும் பணியை மேயர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், நிலைக்குழு தலைவர் (கல்வி) த.விசுவநாதன், எச்.டி.எப்.சி. வங்கி தமிழ்நாடு தலைவர் பிரேம் ஆனந்த், மண்டல தலைவர் ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: