*குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
நெல்லை : தனியார் நெல் வியாபாரிகளின் எடை மிஷின்களில் முறைகேடுகள் அதிகரித்து வருவதாக நெல்லையில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் குரல் கொடுத்தனர். இதேபோல் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக களக்காடு வட்டார விவசாயிகள் அறிவித்தனர். இதையடுத்து கள ஆய்வு நடத்த கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் சுகுமார் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் துரை, மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் பூவண்ணன், அம்பை வனச்சரக துணை இயக்குநர் ஸ்ரீகாந்த், நெல்லை மாவட்ட வன அலுவலர் இளங்கோ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கற்பக ராஜ்குமார், நேர்முக உதவியாளர் (பொது) அனிதா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தைத் துவக்கிவைத்து கலெக்டர் சுகுமார் பேசுகையில் ‘‘நெல்லை மாவட்டத்தில் பிசான பருவ நெல் கொள்முதல் செய்திட 73 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. கடந்தாண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் 11 கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழையால் 63.97 ஹெக்டேர் பரப்பிலான வேளாண் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. அவற்றிற்கு ரூ.12.79 லட்சம் நிவாரணம் வழங்கவும், சேதம் அடைந்த தோட்ட கலை பயிர்கள் 67 ஹெக்டேருக்கு நிவாரணம் ரூ.13.62 லட்சமும் வழங்கிட அரசாணை பெறப்பட்டுள்ளது’’ என்றார்.
இதையடுத்து கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்ற விவசாயிகளும், விவசாய சங்கப்பிரதிநிதிகளும் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் பேசுகையில் ‘‘காட்டுப்பன்றிகளின் தொல்லை களக்காடு வட்டாரத்தில் அதிகமாக இருக்கிறது. மாவட்டம் முழுவதும் காட்டுப்பன்றிகளை ஒழிக்க எந்த அரசியல் கட்சி நடவடிக்கை எடுக்கிறதோ அவர்களுக்கு எங்கள் வாக்கு என்பதை ஒருங்கிணைந்து அறிவிக்க உள்ளோம்.
காட்டு பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை இல்லையெனில் தேர்தலை புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை. களக்காடு வட்டாரத்தில் இப்போது நேத்திரம் வாழை குலைகளுக்கு விலையே இல்லை. ஒருகிலோ நேத்திரம் வாழைப்பழம் முன்பு ரூ.40க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இப்போது ரூ.17க்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது’’ என்றார்.
மானூர் விவசாயி ஆபிரகாம் பேசுகையில் ‘‘உளுந்து பயிருக்கு காப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. ஆட்டுக் கொட்டகை அமைக்க முழு மானியம் தர வேண்டும். 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
அப்போதுதான் விவசாயிகளை பிள்ளைகள் நல்ல முறையில் கவனிப்பர்’’ என்றார்.சேதுராயன்புதூர் விவசாயி ஆறுமுகம் பேசுகையில் ‘‘சேதுராயன்புதூர் குளத்திற்கு தண்ணீர் வரும் நீர்நிலை ஓடைகளை ஆக்கிரமித்து தனியார் கல்குவாரி நிறுவனம் கல்குவாரியை அமைத்துள்ளது. நீர்நிலை ஓடைகளில் அமைக்கப்பட்டுள்ள குவாரியிலிருந்து தினமும் சுமார் 20 ஆயிரம் டன் வரை கற்கள் வெட்டி எடுத்துச் செல்லப்படுகின்றன.
எனவே நீர்நிலை ஓடைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள அந்த கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்வதோடு, நீர்நிலை ஓடையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்து கலெக்டர் பேசுகையில் ‘‘இந்த விவகாரம் தொடர்பாக வரும் செவ்வாய்க்கிழமை நெல்லை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
எனவே, அந்த விசாரணையில் பங்கேற்க வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்)இட்டேரி விவசாயி செல்வகணேஷ் பேசுகையில் ‘‘இட்டேரி பகுதியில் உலர்களம் காணப்படும் பகுதியில் விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் அதற்கு அனுமதி வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்றார்.
சிங்கம்பட்டி விவசாயி சொரிமுத்து கூறுகையில் ‘‘இடைத்தரகர்கள் இன்றி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும். தனியார் நெல் வியாபாரிகள் கொண்டு வரும் டிஜிட்டல் தராசுகளில் 4 கிலோ வரை அதிகமான நெல் விவசாயிகளை ஏமாற்றி வாங்கி செல்கின்றனர்.
அந்த எடைக்கருவிகளை அடிக்கடி சோதனையிட வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் உடனடியாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் எடையளவு கருவிகளை பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார்.
தாய்மொழிநாள் உறுதிமொழி
நெல்லையில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு முன்பாக உலகத் தாய்மொழிநாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி கலெக்டர் சுகுமார் தலைமையில் நடந்தது.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகளும், அரசுத்துறை அலுவலர்களும் ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்- எப்போதும் தமிழ்’ என்ற நடைமுறையைக் கொண்டுவர பாடுபடுவோம்.
தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர்ச் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என கலெக்டர் சுகுமார் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
