*விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்
விருதுநகர் : தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சுமார் ரூ.245 கோடி பயிர் கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர்.
கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் எடுத்துரைத்தார். தொடர்ந்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது. 3,137 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.43 கோடி 87 லட்சம் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சுமார் ரூ.245 கோடி பயிர் கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், தென்னை, மா மரங்களுக்கு பயிர் காப்பீடு மற்றும் நிவாரணத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் அதிக அளவு உலர்களங்கள் தேவைப்படுகிறது எனவும், சிறப்பு நிதி ஒதுக்கி உலர்களம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, மம்சாபுரம் கிராமத்திற்கு நிரந்தர நூலக கட்டிடம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு, சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.சம்பா வத்தல் மற்றும் பஞ்சவர்ண மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும், மக்காச்சோள உற்பத்தி அதிகரித்துள்ளதால் விவசாயிகள் நல்ல விலை கிடைக்காமல் அதிக அளவு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கண்மாயில் கொட்டப்படும் கழிவுகளையும் மற்றும் சீமைக்கருவேல மரங்களையும் அகற்றி விரைவில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை, செயற்பொறியாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்குமாறும், நீர் நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநர் அம்சவேணி, இணை இயக்குநர் மோகன்தாஸ் சௌமியன்,ல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் சுபா வாசுகி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் இந்திரா உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
