×

ஓவேலி பேரூராட்சியில் அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கட்டுப்பாடுகள் தளர்வாகுமா..?

*50 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கையுடன் காத்திருக்கும் மக்கள்

கூடலூர் : கூடலூர் தாலுகாவில் உள்ள ஓவேலி பேரூராட்சி மாவட்டத்தில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட பேரூராட்சியாகும். ஆங்கிலேயர் காலத்தில் இங்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர்களில் காபி,தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இவற்றில் பணி புரிவதற்காக தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் இருந்தும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர்.

அந்த ஊர்களில் ஏற்பட்ட வறுமை காரணமாக இங்கு வந்த தொழிலாளர்கள் கடுமையாக உழைத்து பெருந்தோட்டங்களை உருவாக்கினர். சுமார் ஏழு தலைமுறைக்கும் மேல் இவர்களது வாரிசுகள் இங்குள்ள தோட்டங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணிபுரிந்துள்ளனர்.

ஆரம்ப காலகட்டங்களில் மலேரியா உள்ளிட்ட பல்வேறு பெரு நோய்களால் ஏராளமானவர்கள் உயிரிழந்தும் உள்ளனர். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் சொந்த ஊர்களில் உள்ள கெடுபிடிகள் காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்லாமல் இந்த ஊரையே சொந்த ஊராக்கி கொண்டவர்கள் ஏராளம்.

தேயிலை தோட்டங்களில் வேலை செய்த பலர் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களை ஒட்டி இருந்த தரிசு நிலங்களை தங்களது விவசாய நிலமாக மாற்றினார். கால மாற்றத்தில் அந்த நிலங்களில் வீடுகள் கட்டி கால்நடை வளர்ப்பு விவசாயம் என தங்களது தொழிலை மாற்றிக் கொண்டனர்.

இதே போல் கடந்த 1969ம் ஆண்டுக்குப் பின் ஸ்ரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தில் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் பலர் சொந்த ஊருக்கு சென்று கையிருப்புகளையும்,நில உடமைகளையும் இழந்த நிலையில் தங்களுக்குத் தெரிந்த தேயிலைத் தோட்ட தொழிலை முதலீடாகக் கொண்டு இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிக்கு சேர்ந்தனர். இவர்களில் பலரும் இதே பகுதியில் தனியாக வீடுகட்டி தங்களிடம் உள்ள நிலங்களில் விவசாயம் செய்தும் வருகின்றனர்.

1845ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 5265 பேர் வசித்துள்ளனர். 1961ம் ஆண்டு ஓவேலி மாவட்டத்தில் முதல் பேரூராட்சியாக உருவாக்கப்பட்டது.தொடர்ந்து 1967ம் ஆண்டு முதல் வரி வசூல் துவங்கப்பட்டது. கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் முதல் பொதுத்துறை வங்கி மற்றும் சினிமா தியேட்டர் ஆகியவை இங்குள்ள பார்வுட் பஜாரில் துவக்கப்பட்டது. இப்பேரூராட்சியில் சுமார் 25 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.

இப்பேரூராட்சி தற்போது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வதில் மிகவும் பின்தங்கி உள்ளது. பேரூராட்சிக்குட்பட்ட முழு நிலப்பகுதியும் பிரிவு 17ல் அடங்குவதால் அடிப்படை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. பிரிவு 17 நிலப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டால் மட்டுமே இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது.

அடிப்படை வசதிகளான சாலை, நடைபாதை, பாலங்கள் அமைத்தல், வீடுகள் கட்டுதல் போன்றவற்றிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் இப்பேரூராட்சி மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கின்றனர்.

Tags : Oveli ,Koodalur ,Taluga ,
× RELATED திருப்பூரில் தீவிரவாத அமைப்புக்கு...