×

மாணவ, மாணவிகள் இளம் வயதில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்

*சட்ட விழிப்புணர்வு முகாமில் தகவல்

ஊட்டி : மாணவ, மாணவிகள் இளம் வயதில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என ஊட்டியில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டது.நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஊட்டி பெத்தலகேம் பெண்கள் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

இதில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பாலமுருகன் தலைமை வகித்து பேசியதாவது: 1949 நவம்பர் 26ல் அரசியலமைப்புச்சபை, இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. இது 1950 ஜனவரி 26ல் நடைமுறைக்கு வந்தது.

அரசியலமைப்பு சட்டம் நமக்கு கல்வி உரிமை, வாக்களிக்கும் உரிமை,அனைவரும் சமம், பேச்சுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதும் அடிப்படை உரிமை தான். 2025ம் ஆண்டு இந்தியா முழுவதும் 100க்கு 96 சதவீத போக்சோ வழக்குகள் பதிவாகி இருந்தது.

எனவே தான் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசியமாகிறது. செல்போன் போன்றவற்றை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அதேபோல் போதை பொருட்கள் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். நாம் வாழ்வில் ஏதோவொரு சூழலில் ஒரு முடிவு எடுப்போம். அந்த முடிவை சரியானதாக இருக்க வேண்டும். அது இளம் தலைமுறையினராகிய உங்கள் கைகளில் தான் உண்டு.

தவறான முடிவுகளை எடுத்து விட கூடாது என்பதற்காக தான் இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. உங்கள் சிறப்பான வாழ்வு உங்கள் கைகளில் தான் உள்ளது. இந்த வயதில் படிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்.

கல்வி என்பது மூலதனம். விழிப்புணர்வு என்பது பாதுகாப்பு. எந்த அளவிற்கு படிக்கிறீர்களோ, பிற தகவல்களை அறிந்து கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் இருப்பீர்கள். உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற ஒரு குறிக்கோளை இலக்காக வைத்து அதனை நோக்கி பயணிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

18 வயது வரை உள்ளவர்கள் குழந்தைகள் எனப்படுவார்கள்.பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் தான் போக்சோ சட்டம். குட் டச், பேட் டச் என்பது போல் தங்கள் உடலை யாரும் தொட அனுமதிக்க கூடாது. ஒரு தவறான விஷயத்தை யாரிடமும் தெரிவிக்க கூடாது என யாரேனும் உங்களிடம் சொல்லி அத்துமீறினால் உடனடியாக பெற்றோர், ஆசிரியர், நெருங்கி பழங்கும் நண்பர்களிடம் தொிவிக்க வேண்டும்.

மேலும் சைல்டு ஹெல்ப் லைன் 1098 என்ற எண்ணிற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பாலியல் தொந்தரவு, குழந்தை தொழிலாளர்கள், குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தல் உள்ளிட்டவைகளையும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தமிழக அரசு மூலம் அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் 85 குழந்தைகள் இதன் மூலம் பலனடைந்து வருகின்றனர்.

திருமணம் செய்ய பெண்ணிற்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும் என இந்நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இதில் சமூக நல அலுவலர் பிரவீணா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தை பாதுகாப்பு குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ooty ,Nilgiri District Legal Services Commission ,Ooty Bethalakem Girls' School… ,
× RELATED திருப்பூரில் தீவிரவாத அமைப்புக்கு...