- மும்பை
- பிரதமர் மோடி
- ஜனாதிபதி மேக்ரன்
- மோடி
- ஜனாதிபதி
- இம்மானுவேல் மக்ரோன்
- AI தாக்க உச்சி மாநாடு
- டெல்லி…
மும்பை: பிரதமர் மோடி – பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை மும்பையில் நடந்தது. இதில், பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. டெல்லியில் நடக்கும் ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி அழைப்பின் பேரில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் 3 நாள் பயணமாக நேற்று அதிகாலை மும்பை வந்தார். தனது எக்ஸ் பதிவில் அதிபர் மேக்ரானை வரவேற்ற பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க மும்பை புறப்பட்டுச் சென்றார்.
மும்பை லோக் பவனில் பிரதமர் மோடி – அதிபர் மேக்ரான் தலைமையில் இரு நாட்டு உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இருதரப்பு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, உலகளாவிய சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் மற்றும் ஏர்பஸ் இணைந்து, கர்நாடகாவின் கோலார் மாவட்டம் வேகமலில் எச்125 ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்காக ஆலையை மோடி, மேக்ரான் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தனர். இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: எனது அன்பு நண்பர் மேக்ரானை மும்பையில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு பிரான்சில் நடந்த ஏஐ மாநாட்டிற்கு என்னை அதிபர் மேக்ரான் வரவேற்றார். இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஏஐ மாநாட்டிற்கு அவரை வரவேற்கும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றுள்ளேன். இந்தியாவும் பிரான்சும் மிகவும் சிறப்பு வாய்ந்த உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. பிரான்ஸ், இந்தியாவின் பழமையான கூட்டாளிகளில் ஒன்றாகும்.
இந்தியா, ஐரோப்பா இடையேயான உறவில் இந்த ஆண்டு திருப்புமுனை ஆண்டாகும். சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இன்று உலகம் நிச்சயமற்ற சூழலை கட்டத்தை கடந்து செல்லும் நிலையில், இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மை உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கான சக்தியாக திகழ்கிறது. அதிபர் மேக்ரானுடன் இணைந்து, இருதரப்பு கூட்டாண்மையில் முன்னெப்போதும் இல்லாத ஆழத்தையும் ஆற்றலையும் நாங்கள் வழங்கி உள்ளோம்.
இந்தியாவும் பிரான்சும் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்திற்கு பறக்கும் திறன் கொண்ட உலகின் அதிநவீன ஹெலிகாப்டரை இந்தியாவில் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் என அனைத்து துறையிலும் இருதரப்பு உறவை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இந்தியாவும் பிரான்சும் உலகளாவிய சிறப்பு கூட்டாளிகளாக தங்கள் உறவை உயர்த்தி உள்ளன. இந்தியா-பிரான்ஸ் உறவுக்கு எந்த எல்லைகளும் கிடையாது. பெருங்கடலின் ஆழம் முதல் உயரமான மலையின் உச்சியையும் எங்கள் உறவுகள் எட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
பின்னர் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ‘‘இந்தியாவும், பிரான்சும் மிகவும் நம்பகமான கூட்டாளிகள். ரபேல் போர் விமானங்கள் முதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் வரை நாங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தி உள்ளோம். எங்கள் இரு நாடுகளும் சட்டத்தின் ஆட்சியை உறுதியாக நம்புகின்றன. இது கடந்த சில ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் இந்தியாவும் பிரான்சும் தொடர்ந்து ஒத்துழைக்கும்’’ என்றார்.
ஏஐ மாநாட்டில் இன்று பங்கேற்பு
* மும்பையில் கடற்கரைச் சாலை அருகில் உள்ள பிரபலமான மரைன் டிரைவ் பகுதியில் நேற்று காலை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தனது பாதுகாவலர்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டார்.
* பின்னர் தனது மனைவி பிரிகிட்டி மேக்ரானுடன், கடந்த 2008ல் மும்பை தீவிரவாத தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தினார்.
* பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கேட்வே ஆப் இந்தியாவில் நடந்த இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க, கலாச்சார விழாவில் அதிபர் மேக்ரான் பங்கேற்றார்.
* இன்று டெல்லி செல்லும் அதிபர் மேக்ரான், இன்றும் நாளையும் ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
* பிரான்சிடம் இருந்து ஏற்கனவே 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்ட நிலையில், ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பில் மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
