போலி வாக்காளர்களை சேர்த்ததால் மேற்குவங்கத்தில் 7 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட்: 28ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

 

கொல்கத்தா: வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்த 7 அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலைச் சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் போது சுமார் 1.63 லட்சம் தகுதியற்ற வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக வங்கதேசம் எல்லையை ஒட்டியுள்ள கூச் பெஹார், மால்டா, முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு, தெற்கு 24 பர்கானா ஆகிய 5 மாவட்டங்களில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அதிகப்படியான பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

செய்தித்தாள் துண்டுகள் மற்றும் வெற்று காகிதங்களை ஆதாரமாக வைத்து அதிகாரிகள் போலி வாக்காளர்களை அனுமதித்ததுடன், ரகசிய குறியீடுகளைப் பயன்படுத்தி இல்லாத நபர்களைப் பட்டியலில் சேர்த்துள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக பருய்பூர் கிழக்கு மற்றும் மொய்னா தொகுதிகளைச் சேர்ந்த தேபோட்டம் தத்தா சவுத்ரி, ததாகதா மண்டல், பிப்லோப் சர்க்கார், சுதீப்தா தாஸ் உள்ளிட்ட 7 தேர்தல் அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து தலைமை தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியதால் தேர்தல் ஆணையமே நேரடியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது இன்றுக்குள் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது. வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறுவதால், இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 28ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்திற்கு பாஜக ‘பைக்’ இறக்குமதி
இந்தியா – வங்கதேச எல்லையில் அமைந்துள்ள எல்லை மாவட்டமான மால்டாவில் உள்ள ஷியாமபிரசாத் பவன் எனும் பாஜக மாவட்ட அலுவலகத்திற்கு, பீகார் மாநில பதிவெண் கொண்ட 14 பைக்குகள் கொண்டு வரப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள், ‘அண்டை மாநிலமான பீகாரில் இருந்து வெளிமாநிலத்தவர்களையும் பைக்குகளையும் பாஜக இறக்குமதி செய்து கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்கிறது’ என பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக, ‘தேர்தல் பிரசாரத்திற்காகவும் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திப்பதற்கும் வசதியாகவே பைக்குகள் கொண்டு வரப்பட்டன’ எனத் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தால் மால்டா பகுதியில் பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: