கோவை மாநகரில் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளாக புதிதாக 302 பேர் சேர்ப்பு; 1105 பேரில் சிலரை விடுவிப்பது குறித்து ஆலோசனை

கோவை,பிப்.16: கோவை மாநகரில் புதியதாக சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளாக 302 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.அதேபோல 1105 பேரில் சிலரை விடுவிப்பது குறித்தும் போலீசார் ஆலோசனை செய்து வருகின்றனர். கோவை போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ரவுடிகளின் குற்ற வரலாற்றை போலீசார் மாதந்தோறும் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் ரவுடிகளின் தற்போதைய நிலை குறித்தும் கண்காணித்து வருகின்றனர். இதில் தொடர்ந்து குற்றசச் சம்பங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வெளியே வந்து மீண்டும் குற்றச்சம்பங்களில் ஈடுபட்டவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

அவ்வாறு ரவுடிகளின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு சம்மன் கொடுத்து கோவை மாநகரை விட்டு போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.சம்மன் கொடுத்தும் மாநகரை விட்டு வெளியேறாத ரவுடிகள் மீது வழக்கு பதிவு செய்து,போலீசார் கைது செய்து வருகின்றனர். அதேபோல போலீசார் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து வருகிறார்கள் இதற்கிடைய தொடர்ந்து குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு வரும் 302 ரவுடிகளை சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது போலீசாரின் கண்காணிப்பு வலையத்தில் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ரவுடிகளின் பின்னணிகளை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டது. கடந்த காலங்களில் ரவுடியாக வலம் வந்தவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் தொடர்ந்து ரவுடிகளாக வலம் வருகிறார்களா, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்களா, உயிருடன் உள்ளார்களா, திருந்தி வாழ்ந்து வருகிறார்களா, போன்ற விபரங்களை போலீசார் சேகரித்தனர்.

ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு குறைந்தது 10 ரவுடிகள் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளாக சேர்க்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கோவை மாநகர வடக்கு போலீஸ் சரகத்தில் 122 பேரும், தெற்கு போலீஸ் சரகத்தில் 180 பேரும் என 302 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 ரவுடிகளை ஒரு போலீஸ்காரர் விதம் கண்காணித்து அறிக்கை அளிப்பார்கள். ஏற்கனவே வடக்கு போலீஸ் சரகத்தில் 594 பேரும், தெற்கு போலீஸ் சரகத்தில் 511 பேரும் என 1105 பேர் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளாக உள்ளனர்.

அதில் வடக்கு போலீஸ் சரகத்தில் 91 பேரும், தெற்கு போலீஸ் சரகத்தில் 67 பேரும் சிறையில் உள்ளனர். 10 ஆண்டுகளாக எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல், திருந்தி வாழ்பவர்களின் விவரங்களும் தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்களை சில மாதங்களில் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இருந்து விடுவிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோவை மாநகரில் ரவுடிகளின் செல்பாட்டை தடுக்க முடியும், குற்றச்சம்பங்களும் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: