சென்னை: தமிழ்நாட்டில் தாய் சேய் நல சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் தாய்மை செயயை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (13.02.2026) சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில், 2025-26 சட்டப்பேரவை மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, ரூ.8.07 கோடி மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் திட்டத்தை தொடங்கி வைத்து, தாய்மார்களுக்கு பெட்டகத்தை வழங்கி, தாய் மற்றும் சேய் நலனை மேம்படுத்தும் நோக்கில், பேறுகால மற்றும் குழந்தை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு (PICME) யின் தாய்மை செயலியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்;
முதலமைச்சர் மக்கள் நல்வாழ்வுத்துறையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் இன்று 2 திட்டங்கள் அரசு மருத்துவமனைகளில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, கடந்த 5 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட சிறப்புக்குரிய திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள். அந்தவகையில் இன்று பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டம் புதிதாக தொடங்கப்பட்டிருக்கிறது. பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் என்பது ஏற்கெனவே நிதிநிலை அறிவிப்பில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் 8 லட்சம் குழந்தை பிறப்புகள் உருவாகிறது. இதில் 4.5 இலட்சம் குழந்தை பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் பிறக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் 20% இரண்டு கிலோவுக்கும் கீழ் எடை குறைவாக உள்ள குழந்தைகளாக பிறக்கின்றது. இப்போது 52,000 குழந்தைகள் எடை குறைவான நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபோன்று எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், தொடர் கவனிப்பிற்கும் இரும்புச்சத்து சொட்டு மருந்தும், விட்டமின் பி3 மற்றும் மல்டி விட்டமின் சொட்டு மருந்துகள் ஆகியவை அடங்கிய பச்சிளங் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ரூ.8.07 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
தாய்மை செயலி
பிறந்த குழந்தை ஒவ்வொரு வாரமும் எந்த அளவில் பராமரிக்கப்பட வேண்டும் என்கின்ற அறிவுறுத்தல் அடங்கிய படங்கள் கொண்டு விளக்கக்கூடிய கையேடு வெளியிடப்பட்டு அது பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனுடன் இன்று தாய்மை செயலி என்கின்ற புதிய செயலி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலி தமிழ்நாட்டில் தாய்சேய் நல சேவைகளுக்கு வலுப்படுத்தும் முக்கிய முன்னெடுப்பாகும். டிஜிட்டல் செயல்மூலம் கர்ப்பிணித் தாய்மார்கள் பதிவு செய்யப்படும் தளத்திலிருந்து பேறுகால பரிசோதனைகள், பிரசவம், பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ச்சி தடுப்பூசி கண்காணிப்பு போன்றவைகள் இந்த செயலியின் மூலம் கண்காணிக்கப்படும். அந்தவகையில் தாய்மை செயலியும் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள ஒன்றாகும்.
மகப்பேறு பிறப்பு இறப்பு விகிதம் ஒப்பீடு
இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு சிறப்பு திட்டங்களினால் மகப்பேறு இறப்பு விகிதமும், குழந்தைகளின் மரண விகிதமும், தொடர்ச்சியாக குறைந்துக் கொண்டு வருகிறது. 2021-22 இல் 1 இலட்சம் குழந்தைகளுக்கு தாய்மார்களின் இறப்பு என்பது 90.5 ஆக இருந்தது, 2022-23இல் 52 ஆக குறைந்தது, 2023-24இல் 45.5 ஆக குறைந்தது, 2024-25இல் 39.5 ஆக குறைந்துள்ளது. இது மிகப் பெரிய அளவிலான சாதனையாகும். அதேபோல் குழந்தை மரண விகிதம் என்பது 1000 குழந்தைகள் பிறப்புக்கு 2021-22இல் குழந்தை இறப்பு என்பது 10.4 அளவில் இருந்தது, 2022-23 இல் 10.2 ஆக குறைந்தது, 2023-24இல் 8.2 என்கின்ற அளவில் குறைந்தது, 2024-25இல் 7.7 ஆக குறைந்திருக்கிறது.
எனவே மகப்பேறு இறப்பு விகிதமும், குழந்தை மரண விகிதமும் வெகுவாக குறைவதற்கு பூஜ்ஜியம் நிலையை எட்டுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக குறைக்கும் நடவடிக்கைகள்தான் பச்சிளங் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டம். மகப்பேறு இறப்பு விகிதத்தை வெகுவாக குறைப்பதுதான் தாய்மை செயலி.
அரசு மருத்துவர் சங்கங்கள் போராட்டம் தொடர்பான கேள்விக்கு
அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை இந்த அரசு எந்தவிதத்திலும் அவர்களை கைவிட்டதில்லை. இன்று கூட முதலமைச்சர் 9,801 பேருக்கு புதிய பணிநியமன ஆணையினை வழங்கினார்கள். தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் (TRB) போன்றவற்றின் மூலம் ஆணைகளை வழங்கினார்கள். அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் மட்டும் 3,722 பேர். இதில் கிராம சுகாதார செவிலியர்கள் 2,107 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதோடு அவர்களுக்கு பூஜ்ஜியம் காலிப்பணியிடம். இந்த பணியிடத்திற்கு நீதிமன்றத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. இதனையெல்லாம் இந்த அரசு கருத்தில்கொண்டு இவர்களுக்கு விரைவாக பணிநியமன ஆணைகளை வழங்கி இருக்கிறது. அரசாணை 154 வந்தது உண்மை.
அரசாணை 293 வந்தது உண்மை. இந்த அரசாணையில் உள்ளவற்றை இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு நிறைவேற்றியிருக்கிறோம். ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதில் பிரதானமானது ரூ.3,000/- allowance அனைத்து மருத்துவர்களுக்கும் கொடுத்தார்கள். கொடுக்கும்போது என்ன சொன்னார்கள் என்றால் மலைப்பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு ரூ.3,000/- என்று வழங்கினார்கள். தற்போது அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த Allowance தர வேண்டும் என்பது. முதலமைச்சரின் கவனத்திற்கு இது தொடர்பாக பேசி இருக்கிறோம். இதற்காக மருத்துவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள், அதனை தவறு என்று நான் சொல்லவில்லை, அவர்களையும் அழைத்து இந்த அரசு பேச்சுவார்த்தை நடத்தும். இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு நானே 50 முறைக்கு மேல் மருத்துவர்கள் சங்கங்களை அழைத்து பேசி இருக்கிறேன். ஒரு சில கோரிக்கைகள் அவர்கள் கேட்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
மகளிர் உரிமைத் தொகை தொடர்பான கேள்விக்கு
ஒட்டு மொத்த மகளிர் சமுதாயமும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஆற்றான்மையை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் விமர்சனம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதுகுறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. 1.31 கோடி மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசிற்கு கிடைத்த தகவல் தேர்தல் நடைபெறும்போது, இடையில் வரும் 3 மாதம் அதாவது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது மாதம் ரூ.1,000/- கொடுக்க கூடாது என்று நீதிமன்றத்திற்கு செல்ல இருந்தார்கள்.
இடையில் அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கிவிட்டு, தேர்தல் காலங்களில் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்கின்ற காரணத்தினால் தாய்மை உள்ளத்தோடு முதலமைச்சர் 3 மாத காலத்திற்கான உரிமைத் தொகை ரூ.3,000/- மற்றும் கோடைக்கால சிறப்பு தொகை ரூ.2,000/- சேர்த்து ரூ.5,000/- வழங்கி இருக்கிறார்கள். அனைவருமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மேலும் முதலமைச்சர் திராவிட மாடல் 2.0 ஆட்சி மே மாதத்திற்கு பிறகு தொடரும்போது மாதம் ரூ.2,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த தாய்மார்களும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்று கூறினார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனை இயக்குநர் சுமதி, சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தாராமன், கூடுதல் இயக்குநர்கள் தேரணிராஜன், நிர்மல்சன் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், செவிலியர்கள், தாய்மார்கள் பலர் கலந்து கொண்டனர்.
