காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் திருவிடந்தையில் நடந்த திமுக சென்னை-விழுப்புரம் மண்டல மாநாட்டில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் பேசியதாவது: பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு திமுக அவ்வளவுதான் என்று சொன்னார்கள். ஆனால், கலைஞர் வந்தார், கலைஞருக்கு பிறகு திமுக அவ்வளவுதான் என்று மகிழ்ச்சிடைந்தார்கள். அதன்பிறகு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்தார். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவை யாராலும் அழிக்க முடியாது. மேலும் வலுவாகுமே தவிர வலிமை குறையாது. அண்ணா காலத்திலும் கலைஞர் காலத்திலும் எதிரிகள் கொஞ்சம் நாணயமாக இருந்தார்கள். ஆனால் இப்போது இருக் கின்ற எதிர்கள் நேர்மையற்ற எதிரிகள், நாணயமற்ற எதிரிகள். டெல்லியில் ஒன்றிய பாஜக அரசு எல்லா விசாரணை அமைப்புகளையும் வைத்து தமிழ்நாட்டை மிரட்டுகிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நெருக்கடி தர முடியுமோ அந்தளவுக்கு தருகிறார்கள். இதையெல்லாம் சமாளித்து தமிழ்நாட்டை வெற்றிப்பாதையில் அழைத்து செல்கிற முதலமைச்சர் நம்முடைய திமுக தலைவர். இந்தியாவில் 2 தத்துவங்கள் இருக்கிறது. ஒரு தத்துவம் பிஜேபி சொல்கிற இந்துத்துவா தத்துவம், மற்றொரு தத்துவம் நம்முடைய தலைவர் செயல்படுத்தும் திராவிட மாடல் தத்துவம். எல்லோருக்கும் எல்லாம் என்கிற லட்சிய முழக்கத்தோடு இந்த மண்ணில் அவர் கொண்டு வந்துள்ள எண்ணற்ற திட்டங்கள் மக்களை வாழவைத்து கொண்டிருக்கிறது. பலவழிகளில் நெருக்கடிகளை தருகிறார்கள். அதையெல்லாம் சமாளித்து தமிழ்நாட்டை வெற்றிப்பாதையில் அழைத்து செல்கிறார்.
அவருடைய உழைப்புதான் எதிரிகளால் நுழைய முடியாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி இருக்கிறது. தலைவருடைய உழைப்புக்கு ஈடுகொடுத்து உழைத்தால்போதும், 200 தொகுதிக்குமேல் கண்டிப்பாக ஜெயிக்க முடியும். தலைவரின் கட்டளையை சரியாக நிறைவேற்றினால்போதும், எல்லா வாக்குச்சாவடிகளுமே வெற்றிவாக்கு சாவடிகளாக மாறிவிடும். சட்டமன்ற தேர்தலில் தலைவரின் கட்டளையே நிறைவேற்றுவதுதான் நமக்கு இருக்கிற ஒரேபணி. இதை சரியாக செய்து விட்டால் நம்முடைய கழகம் மீண்டும் ஆட்சிக்கு வருது உறுதி. இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
