பட்ஜெட்டில் வஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்: தமிழகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது; தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், பங்கேற்பு

சென்னை: பட்ஜெட்டில் வஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று மாபெரும் போராட்டம் நடந்தது. இதில் தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், புதுப்புது சட்டங்கள், ஒப்பந்தங்கள் வழியே மக்களை வஞ்சிப்பது, நம் வளர்ச்சியை தடுத்து வீழ்ச்சியில் தள்ள துடிப்பது என அநீதி இழைத்து வரும் ஒன்றிய பாஜவை எதிர்த்தும், அதோடு கூட்டு சேர்ந்து டப்பா இன்ஜின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் டெல்லியின் அடிமையாக்க துடிக்கும் அதிமுகவைக் கண்டித்தும் அனைத்து மாநகரங்களிலும் தலா ஒரு இடத்திலும் மற்ற இடங்களில் நகர-ஒன்றிய-பேரூர் அளவிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகரங்களிலும், ஒன்றிய, நகர, பேரூர் அளவில், தமிழ்நாடு முழுவதும் 1500க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சைதாப்பேட்டையில் நேற்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் திமுக சார்பில் எம்எல்ஏக்கள் மயிலை த.வேலு, தாயகம் கவி, சிபிஎம் மாநிலச் செயலாளர் செயலாளர் சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் சிவா, மதிமுக பொருளாளர் செந்தில் அதிபன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர், தவாக சென்னை மாவட்ட தலைவர் தமிழரசன், விசிக துணை பொதுச் செயலாளர் என்.வன்னியரசு, திக சென்னை மாவட்ட பொறுப்பாளர் வில்வநாதன், மநீம மாவட்டச் செயலாளர் கதிர், தமிழ்மாநில தேசிய லீக்கின் செயலாளர் ராஜா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர், விஜயசேகர், ஜோதி பொன்னம்பலம், எம் எம்டிஏ கோபி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ”தமிழ்நாட்டிற்கு 12 ஆண்டுகளாக பாஜவின் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. இந்த துரோகத்திற்கு எல்லாம் துணை போனவர்கள் யார்?. ஒன்றிய அரசு சொன்ன இடத்தில் கையொப்பமிட்டது யார்? நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதித்தது யார்? நூற்றுக்கணக்கான குழந்தைகள் தற்கொலைக்கு எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசு தான் பொறுப்பு என்பதை யாரும் மறந்து விடாதீர்கள். வாக்கு கேட்க வருவார்கள். முகமூடி அணிந்து வருவார்கள். முகத்திலே கைகுட்டை அணிந்து வருவார்கள்.

எப்பொழுதுமே எந்த காலத்திலும் திருக்குறளை படித்துவிட்டு தானே அறிக்கை தாக்கல் செய்வார்கள். அதற்கு பிறகு பார்த்தால் ஒரு நயா பைசா கூட தமிழ்நாட்டிற்கு ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் இல்லை. அப்படி என்றால் மோடி முடிவு செய்துவிட்டால் தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது. அறிவிப்பு செய்தும் ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டில் எந்த நிதியை அளித்தாலும் அங்கு எதுவும் செல்லுபடி ஆகாது. ஏன் என்றால் அங்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற ஒரு தலைவர் இருக்கிறார். என்ன சலுகை அறிவித்தாலும் திட்டங்களால் வீழ்த்துகிறார்” என்றார்.

Related Stories: