மும்பை: தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு 2016ம் ஆண்டு லண்டன் சென்றுவிட்டார். இந்த நிலையில் விஜய் மல்லையா மும்பை ஐகோர்ட்டில் தனது வக்கீல் மூலம் இரு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். ஒரு மனுவில், தான் ஒரு தலைமறைவு பொருளாதார குற்றவாளி என்று அறிவித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார். இரண்டாவது மனுவில் தப்பி ஓடிய தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்க வகை செய்யும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த இரண்டு மனுக்கள் மீதும் தலைமை நீதிபதி சந்திரசேகர் மற்றும் நீதிபதி கவுதம் அங்காட் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘ விஜய் மல்லையா நேரில் ஆஜரானால் மட்டுமே அவருடைய இரு மனுக்களையும் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். அவர் இந்தியாவுக்கு வருவாரா வரமாட்டாரா என்று தெளிவுபடுத்த வேண்டும்’ என்று கூறி மனுவை விசாரிக்க மறுத்துவிட்டனர்.
