கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்குது… உள்ளம் கொள்ளை கொள்ளும் கலிபோர்னியா பாப்பி மலர்கள்

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் கலிபோர்னியாவைச் சேர்ந்த பாப்பி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவைகள் சூரியன் உதயமானதும் இதழ் விரித்தும், இரவில் இதழ் குவிக்கும் விநோத தன்மை கொண்டவை. இந்த மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் காலநிலைக்கு ஏற்றவாறு பூத்துக் குலுங்கும் பல வகை மலர்கள் உள்ளன. இங்குள்ள பிரையன்ட் பூங்காவில் தற்போது ஆரஞ்சு வண்ண கலிபோர்னியா பாப்பி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இவை பாப்பாவெரேசி தாவர வகையைச் சேர்ந்தவையாகும். அமெரிக்கா மற்றும் மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மலர்கள், பிரகாசமான வண்ணம் கொண்ட தாவரமாகும்.

இவை கோல்டன் பாப்பி, மெக்சிகன் பாப்பி என்றும் அழைக்கப்படுகிறது. மலைப்பகுதிகளில் வளரும் இவை ஆரஞ்சு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் காணப்படுகின்றன. சூரிய உதயத்திற்கு பின் மலரும் இவை, இரவில் இதழ்களை மூடும் தன்மை கொண்டவை. இவற்றை பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

Related Stories: