மார்த்தாண்டம் அருகே புதிய நகை செய்து தருவதாக கூறி 23 பவுன் மோசடி: கடை முன் உறவினர்களுடன் பெண் தர்ணா

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுஜின் (39). அதே பகுதியை சேர்ந்தவர் சுதர் (40). 2 பேரும் இணைந்து ஞாறான்விளை பகுதியில் நகைக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களிடம், மாங்கரை பகுதியை சேர்ந்த அனிதா (45) என்பவர் புதிய நகை செய்து தரக்கோரி 23 பவுன் பழைய நகை மற்றும் 6 லட்சம் ரூபாயை கடந்த 2024ம் ஆண்டு கொடுத்துள்ளார்.

நகை மற்றும் பணத்தை பெற்று கொண்ட சுஜின், சுதர் புதிய நகை செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. நகை மோசடி செய்யப்பட்டதை அறிந்த அனிதா கடந்த ஆண்டு மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சுஜின், சுதர் ஆகிய 2 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அதில் நகை, பணத்தை திருப்பி கொடுப்பதாக 2 பேரும் கூறியிருந்தனர். இந்தநிலையில் தற்போது வரை அனிதாவுக்கு அவர்கள் நகையை திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அனிதா தனது உறவினர்கள் சிலருடன் ஞாறான்விளையில் சுஜின், சுதர் நடத்தி வரும் நகைக்கடை முன்பு திரண்டார். பின்னர் தன்னிடம் மோசடி செய்த நகையை திருப்பி தரக்கோரி நகைக்கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனிதா உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நகை மோசடி செய்ததாக கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று கொண்ட அனிதா தரப்பினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இது தொடர்பாக அனிதா மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சுஜின், சுதர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: