எண்ணூரில் இருந்து ரேணிகுண்டாவுக்கு சென்ற சரக்கு ரயிலில் கரும்புகை: ரயில்வே போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலில் கரும்புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எண்ணூரில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு நள்ளிரவு சரக்கு ரயில் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு சென்றது. இன்று அதிகாலை ஒரு மணி அளவில் திருவள்ளுர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது சரக்கு ரயில் பெட்டியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. கடம்பத்தூர் ரயில் நிலைய கண்காணிப்பாளர் பார்த்து உடனடியாக ரயில் டிரைவருக்கு தகவல் கொடுத்ததையடுத்து சரக்கு ரயில் கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது.

இதையடுத்து கடம்பத்தூர் ரயில் நிலைய கண்காணிப்பாளர், பேரம்பாக்கம், திருவள்ளூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து புகையை அணைத்தனர். இதன்பிறகு சரக்கு ரயில் ரேணிகுண்டாவுக்கு புறப்பட்டு சென்றது. சரியான நேரத்தில் கரும்புகை அணைக்கப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: