இப்போதாவது தொழிலாளர்கள், விவசாயிகளின் குரலை பிரதமர் மோடி கேட்பாரா? : ராகுல் காந்தி கேள்வி

டெல்லி : ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நாடு தழுவிய போராட்டம் நடத்தி வரும் நிலையில், தொழிலாளர்கள், விவசாயிகளின் குரலை பிரதமர் மோடி கேட்பாரா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். புதிய தொழிலாளர் சட்டம், அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் தொழிலாளர்களும் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு தழுவிய அளவில் நடைபெறும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “இன்று, நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் உரிமைகளுக்காக தெருக்களில் இறங்கி குரல் கொடுக்கின்றனர்.4 தொழிலாளர் சட்டங்களும் தங்கள் உரிமைகளை பலவீனப்படுத்தும் என்று தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர். வர்த்தக ஒப்பந்தங்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு பெரும் அடியாக இருக்கும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைத்து கிராமப்புறங்களின் கடைசி நம்பிக்கையையும் பாஜக அரசு பறித்துவிட்டது. இப்போதாவது தொழிலாளர்கள், விவசாயிகளின் குரலை பிரதமர் மோடி கேட்பாரா? அல்லது அவர் மீதான நெருக்கடி வலுவாக உள்ளதா?.தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் போராட்டத்துடன் நான் உறுதியாக நிற்கிறேன்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: