இம்பால்: மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மெய்டீஸ், குக்கி, நாகா சமூகத்தினரிடையே ஏற்பட்ட இன மோதலில் 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் சொந்த மாநிலத்துக்குள்ளேயே அகதிகளாக குடிபெயர்ந்தனர். தொடர்ந்து 2 ஆண்டுகளாக மோதல்கள், வன்முறை சம்பவங்கள் நடந்து வந்த நிலையில் பாஜவை சேர்ந்த முதல்வர் என்.பிரேன் சிங் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
தற்போது வன்முறைகள் குறைந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் குடியரசு தலைவர் ஆட்சி அகற்றப்பட்டு மெய்டீஸ் இனத்தை சேர்ந்த ஒய் கெம்சந்த் சிங் தலைமையில் பாஜ ஆட்சி அமைந்துள்ளது.
இந்நிலையில் கெம்சந்த் சிங் முதல்வராக பதவியேற்ற பிறகு, முதன்முறையாக நேற்று ஜிரிபாம் மாவட்டத்துக்கு சென்றார். அங்கு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களை முதல்வர் சந்தித்து பேசினார். அப்போது, “மணிப்பூரில் ஜிரிபாம் மாவட்டம் முக்கியமான இடமாகும். இது சிறந்த வணிக மையமாக மாறும் சாத்தியம் உள்ளது. எனவே, ஜிரிபாம் வணிக மையமாக மாற அமைதி, நல்லிணக்கம் அவசியம். அனைவரும் மோதல்களை கைவிட்டு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேண வேண்டும். கலவரத்தால் இடம்பெயர்ந்தவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்து, அவர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வரும் மாதத்துக்கு அந்த பணிகள் முடிக்கப்படும்” என்று கூறினார்.
