திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அபிஷேக நெய் விற்பனையிலும் லட்சக்கணக்கில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சபரிமலையில் சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட புதிய கொடிமரத்திற்காக பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்திலும் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய விஜிலென்சுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து விஜிலன்ஸ் அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கினர். பிரபல மலையாள நடிகர்களான மோகன்லால், சுரேஷ்கோபி, இவரது மகனும், நடிகருமான கோகுல், பிரபல டைரக்டரும் நடிகருமான ரஞ்சி பணிக்கர் உள்பட 27 பேர் கொடிமரத்திற்காக தங்கம் காணிக்கையாக கொடுத்துள்ளனர். சினிமா துறையில் இருந்து மட்டும் 8 பேர் தங்கம் கொடுத்துள்ளனர். தேவசம் போர்டின் பதிவேட்டில் குறிப்பிடப்படவில்லை. பெயர்களுக்கு பதிலாக பக்தன் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கம் நன்கொடையாக கொடுத்தவர்களுக்கு ரசீதும் கொடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து மோகன்லால் உள்பட 27 பேரிடமும் எவ்வளவு தங்கம் கொடுத்தார்கள் என விசாரணை நடத்த விஜிலன்ஸ் தீர்மானித்துள்ளது.
