இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பேசியதாவது: 2001 செப்டம்பர் 11ல் இரட்டை கோபுர தாக்குதல்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் மீண்டும் பாகிஸ்தான் இணைய முடிவு செய்தது. இந்த தாக்குதலுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும் அமெரிக்காவை திருப்திபடுத்துவதற்காக மட்டுமே பாகிஸ்தான் கூட்டு சேர்ந்தது. இந்த விஷயத்தில் 2 முன்னாள் ராணுவ சர்வாதிகாரிகள் (ஜியா உல் ஹக் மற்றும் பர்வேஷ் முஷாரப்) ஆகியோர் செய்த தவறு இது.
அவர்கள் இஸ்லாத்திற்காக அல்ல, உலகின் வல்லரசை திருப்திபடுத்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் இணைந்தனர். இது தலிபான்களை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்பியது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் நீண்டகால வன்முறை, தீவிரமயமாக்கல், பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. எங்களை நன்றாக பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, வேலை முடிந்ததும், டாய்லெட் பேப்பரை விட மோசமாக தூக்கி எறிந்து விட்டு சென்றது. தீவிரவாதம் என்பது கடந்தகால சர்வாதிகாரிகள் செய்த தவறுகளின் விளைவு. பாகிஸ்தானின் தவறும் மீண்டும் மாற்ற முடியாதவை.இவ்வாறு அவர் புலம்பித் தீர்த்துள்ளார்.
