வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே கீழ்பவானி பாசன வாய்க்காலில் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டது. கொலை செய்து வீசப்பட்டதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள மாந்தபுரம் என்ற இடத்தில் கீழ்பவானி பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் நேற்று முன்தினம் (9ம் தேதி) தண்ணீரில் ஒரு மனித எலும்புக்கூடு மிதந்து வந்துள்ளது. இதைக்கண்ட பெண் ஒருவர் அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவயிடத்துக்கு வந்து எலும்புக்கூடை மீட்டனர்.
எலும்பு கூடு ஆணா? பெண்ணா என்று தெரியவில்லை. யாரேனும் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்து விட்டார்களா, அல்லது யாரையாவது பல நாட்களுக்கு முன் கொலை செய்து வாய்க்காலில் வீசி சென்றனரா என்ற கோணத்தில் வெள்ளகோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசார் எலும்புக்கூடை பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று அனுப்பினர். இது தொடர்பாக வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
