மே.வங்கத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை: முதல்வர் மம்தா அறிவிப்பு

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முன்னதாக ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வேலையின்மை உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் மாநில தலைமைச் செயலகமான நபன்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘மாநில அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மூன்று முதல் நான்கு திட்டங்களை அறிவித்து இருந்தோம். யுவசக்தி திட்டம் 21 வயது முதல் 40 வயது வரை உள்ள 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கானது.

இந்த திட்டத்தை ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் நிதியாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்பதால் முன்கூட்டியே ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்தவர்கள் மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகையான பெறுவார்கள். வேறு எந்த திட்டத்தின் கீழும் அவர்கள் நிதி பெறவில்லை என்றால் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை ரூ.1500 வழங்கப்படும்.

ஐந்து ஆண்டுகளுக்கு பின் அது மதிப்பாய்வு செய்யப்படும். சட்டமன்ற தொகுதி வாரியாக 294 முகாம்கள் அமைக்கப்படும். வருகின்ற 15ம் தேதி முதல் 26ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் ஆவணங்களை சமர்ப்பித்து அந்த இடத்திலேயே ஒப்புதல் ரசீதை பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.

Related Stories: