பெங்களூரு: பெங்களூருவில் பிப்.8ம் தேதி ராணுவத்தில் கீழ் நிலை கிளர்க் பணிகளுக்கான குரூப் சி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற 18 தேர்வர்கள் எலக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்தி மோசடி மற்றும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து ராணுவ பயிற்சி கர்னல் எஸ்.எஸ்.ஜோதிர்லிங்கம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் உயரதிகாரி கூறுகையில், ‘ராணுவ பணிக்கான குரூப் சி தேர்வின் போது 18 தேர்வர்கள் டிஜிட்டல் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகளை தேர்வு எழுதுவதற்கு ரகசியமாக பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர். அவர்களிடம் எலக்ட்ரானிக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு தேர்வர்கள் தேர்வு மையத்தின் வெளியில் தங்கள் பையை வைத்துள்ளனர். அதற்குள் எலக்ட்ரானிக் கருவிகள் இணைப்பை ஏற்படுத்தி வைத்திருந்தனர். மோசடியில் ஈடுபட்ட 18 தேர்வர்களை பிப்.9ம் தேதி கைது செய்தோம். அவர்களிடம் இருந்து எலக்ட்ரானிக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன’ என்றார்.
