பொய் குற்றச்சாட்டுக்களை கூறி அவதூறு ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு காங். தலைவர்கள் மீது வழக்கு: அசாம் முதல்வர் சர்மா தகவல்

 

கவுஹாத்தி: பொய் குற்றச்சாட்டுக்களை கூறிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கு எதிராக ரூ.500கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அசாமின் கவுஹாத்தியில் கடந்த 4ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அசாம் காங்கிரஸ் தலைவர் கோகாய், கட்சியின் விசாரணையில் மாநிலம் முழுவதும் சுமார் 12,000 பிகா(3,960 ஏக்கர்) நிலம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் அவரது குடும்பத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவரின் குற்றச்சாட்டுக்களை முதல்வர் சர்மா மறுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் சர்மா தனது எக்ஸ் தள பதிவில், ‘‘காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களான ஜிதேந்திர சிங், பூபேஷ் பாகல் மற்றும் கவுரவ் கோகாய் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின் மூலமாக என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் பொய்யான மற்றும் அவதூறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளனர். நில மோசடிக்கான பட்டியலை நீதிமன்றத்தில் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். மோசடி செய்த நிலம் குறித்த பட்டியலை வெளியிட முடியாவிட்டால் அதற்காக அவர்கள் எனக்கு ரூ.500கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இதற்காக அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன்\\” என்று பதிவிட்டுள்ளார்.

* காங். போராட்டம்

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் அவரது குடும்பத்தினரால் 3900 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது. இவ்வளவு சொத்து குவித்தது குறித்த காரணத்தை முதல்வர் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: