சென்னை: பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு! படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உலகத்திலேயே அழகான அணிகலன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை, சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி சங்கம் மற்றும் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பள்ளி முடித்துவிட்டு பணம் இல்லாத காரணத்தால், கல்லூரிக்கு போகாமல் வீட்டிலேயே பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த பலர், இப்போது மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் காரணத்தினால் மறுபடியும் படிப்பதற்கு வந்திருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் மருத்துவப் படிப்பில் மட்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தார்கள். ஆனால், நாம்தான் அதற்காக தொடர் போராட்டம் நடத்தி, அதை கொண்டுவர வைத்தோம்.
இப்போது, நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, இன்ஜினியரிங், விவசாயம், சட்டம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளிலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை கொண்டு வந்தோம். இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் எல்லாவற்றையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தோம். வெற்றிக்கு ‘ஷார்ட்-கட்’ கிடையாது. கடின உழைப்பு செய்தால்தான் ஜெயிக்க முடியும்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டயலாக் ஒன்று வரும். “கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாமல் கிடைப்பது நிலைக்காது!”
இன்றைக்கு நீங்கள் எந்தத் துறையில் இருக்கும் சாதனையாளர்களை எடுத்துக்கொண்டாலும், எல்லோருக்குமே ஒரு பெரிய ‘ஜெர்னி’ இருக்கும்! அந்த ஜெர்னி, அதில் நீங்கள் போடக்கூடிய Efforts, அந்த ‘Process’-இல் நீங்கள் கற்றுக்கொள்ளும் Lessons, இதெல்லாம்தான் உங்களை பக்குவப்படுத்தும்! பக்குவத்துடன் அடையும் வெற்றிதான் நிலைத்து நிற்கும்! உங்களுக்கு படிப்பில் பிடிமானம் இல்லாதபோது, உங்கள் அப்பா – அம்மாவை நினைத்துப் பாருங்கள். வெளிநாடுகளில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல், பெற்றோர் சப்போர்ட் இல்லாமல் இளைஞர்களே அவர்கள் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளும் கல்ச்சராக இருக்கிறது. ஆனால், நம்முடைய ஊரில், உங்கள் கல்விக்காக பல பெற்றோர்கள் தங்கள் உடல், பொருள், உழைப்பு எல்லாவற்றையும் செலவு செய்கிறார்கள்.
தங்களின் வாழ்நாள் சேமிப்பு எல்லாவற்றையுமே பிள்ளையின் படிப்பிற்காக செலவு செய்கின்ற பெற்றோர்கள் இருக்கும் ஊருதான் நம்முடைய தமிழ்நாடு! அவர்கள், உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுங்கள். அதுதான் என்னுடைய வேண்டுகோள். உங்களைப் பற்றி உங்கள் பெற்றோர்களிடம் நான்கு பேர் பெருமையாக பேசினால், அதைவிட அவர்களுக்கு வேறு பெரிய சந்தோஷம் எதும் இருக்க முடியாது! அந்த மகிழ்ச்சியை அவர்களுக்கு நீங்கள் கொடுங்கள். அதுதான் மிகவும் முக்கியம்!
என்னைப் பொறுத்தவரையில், பெண்கள் என்றாலே அழகுதான்! அப்படிப்பட்ட பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு! படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உலகத்திலேயே அழகான அணிகலன்! இன்றைக்கு இருக்கும் போட்டி நிறைந்த உலகத்தில் நீங்கள் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், சும்மா ஒரு டிகிரி படித்தால் போதாது! நீங்கள் வேலைக்கு சென்றாலும், உங்களுக்கு ஆர்வம் இருக்கும் துறையில், ஆராய்ச்சிப் படிப்பு வரை தொடர்ந்து படிக்க வேண்டும்! இது உங்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமல்ல, நம்முடைய மாநிலம் முன்னேறவும்தான் சொல்கிறேன்.
இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மாநிலமாக, யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் தமிழ்நாடு இருக்கிறது. இது இன்னும் உயர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் வேலைக்குச் செல்லக்கூடிய நிலைமை வர வேண்டும். அதற்கு உங்களுக்கு என்ன தேவை என்றாலும் சொல்லுங்கள் – நான் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். இதுபோன்ற நன்றி தெரிவிக்கும் விழாக்களை விட, நீங்கள் எல்லோரும் நன்றாகப் படித்து, வாழ்க்கையில் முன்னேறினால், அதுதான் நீங்கள் எனக்கு செலுத்தக்கூடிய உண்மையான நன்றி! வெல்லும் தமிழ்ப் பெண்களே! ஆல்த பெஸ்ட், ரூல் த வேல்டு…! இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், இனிகோ இருதயராஜ், பரந்தாமன், சென்னை மண்டல குழுவின் தலைவர் சிற்றரசு, கிறிஸ்தவ உயர்கல்வி சங்க பொதுச் செயலாளர் அருட்தந்தை சேவியர் வேதம், சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி முதல்வர் லில்லியன் ஜாஸ்பர், ஏசு சபையின் அருட்தந்தை தாமஸ் அமிர்தம், சென்னை கிறித்தவக் கல்லூரி முதல்வர் பால்வில்சன், மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சங்கத் தலைவர்கள் கல்லூரி மாணவ-மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர். மேலும் கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்களுக்கு இணையதளம் மற்றும் நேரடியாகவும் தங்கள் நன்றிகளை மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
* முதல்வர் வந்து பேசியது மாணவிகளுக்கு ஊக்கம்
சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி முதல்வர் லில்லியன் பேட்டி: 110 வருடங்களாக இந்த கல்லூரி பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. இவையெல்லாம் நடப்பதற்கு காரணம் நல்ல அரசாங்கம். இன்று முதலமைச்சர் இங்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அரசாணை 5 மூலமாக எங்கள் கல்லூரியில் மட்டும் 65 பேராசிரியர்கள் பயனடைய உள்ளனர். இந்த அரசாணை வந்ததில் எங்களுக்கு அளவில்லா சந்தோசம். முதலமைச்சர் இங்கு வந்து பேசியது எங்கள் மாணவிகளுக்கு நல்ல ஊக்கத்தை அளித்துள்ளது. தொடர்ந்து எங்கள் சில கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
