தமிழ்நாட்டில் நடந்து வந்த எஸ்ஐஆர் பணிகள் நிறைவு: வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல்

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த எஸ்ஐஆர் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்த பணிகள்(எஸ்ஐஆர்) நடைபெற்றது. இதையொட்டி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்று இருந்தனர்.

இதில், சிறப்பு தீவிர திருத்த பணியின்போது உயிரிழந்த வாக்காளர்கள் 26,95,672 பேர், இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3,98,278 பேர் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனையடுத்து, வரைவு வாக்​காளர் பட்​டியல் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய கடந்த டிசம்பர் 19ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை(நேற்று) காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்ய கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என ஒட்டுமொத்தமாக 24.47 லட்சம் வாக்காளர்கள் அதற்குரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.

இணையதளம் வழியாக வாக்காளர் பெயர் சேர்க்க 5.74 லட்சம் பேர், நீக்கம் கோரி 15,935, திருத்தம் கோரி 4.38 லட்சம் என 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தம் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இந்த வாக்காளர் பட்டியல் பெயர் இருந்தால் மட்டும் வர உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்னர் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேலும் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Related Stories: