நிர்வாக காரணங்களுக்காக கூட்டுறவு வங்கி காலி பணியிடங்களில் மாற்றம்: மாநில ஆள் சேர்ப்பு நிலையம் தகவல்

சென்னை: நிர்வாக காரணங்களுக்காக கூட்டுறவு வங்கி காலி பணியிடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில ஆள் சேர்ப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில ஆள்சேர்ப்பு நிலையம் வெளியிட்ட அறிவிப்பு: கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தலைமைக் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக 15.9.2025 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அவற்றில் நிர்வாக காரணங்களுக்காக தற்போது தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி ஆகியவற்றுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை முறையே 111 மற்றும் 65 ஆக மாற்றப்பட்டுள்ளது.

அதாவது தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி உதவியாளர்- 111 இடம், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி உதவியாளர்- 65 இடம். ஆகவே, மாநில ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் உதவியாளர், இளநிலை உதவியாளர் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை திருத்திய அறிவிப்பின்படி 327லிருந்து 267 ஆக மாற்றியமைக்கப்படுகிறது. 267 காலிப்பணியிடங்களில் வகுப்புவாரியாக, பொதுப்பிரிவுக்கு- 81 இடம், பிற்படுத்தப்பட்டோர்-69, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்)-10, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்-சீர்மரபினர்-53, ஆதிதிராவிடர்-40, ஆதிதிராவிடர் (அருந்ததியர்)-8, பழங்குடியினர்-3, பின்னடைவு காலிப்பணியிடம் -3 ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: