டெல்லி: 2025-26 சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏ+ பிரிவை பிசிசிஐ நீக்கியுள்ளது. பிசிசிஐ-யின் 2025-26 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தப் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ‘கிரேடு பி’ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு ‘ஏ+’ (Grade A+) பிரிவில் இருந்தவர்கள், தற்போது ‘பி’ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக குறைய வாய்ப்புள்ளது. கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அவர்களின் ஆட்டம் மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் Grade A, B மற்றும் C என பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடும் வீரர்களுக்கே ‘ஏ’ பிரிவில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்படி சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவர் மட்டுமே தற்போது உயரிய ‘ஏ’பிரிவில் உள்ளனர். பி பிரிவில் வாஷிங்டன் சுந்தர், ரோகித் ஷர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யாகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சி பிரிவில் அக்சர் படேல், திலக் வர்மா, ரிங்கு சிங், சிவம் துபே, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் ஷர்மா, சாய் சுதர்சன், ரவி பிஷ்னோய், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 2025-26ஆம் ஆண்டுக்கான பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் மீண்டும் இஷான் கிஷன் சேர்க்கப்படவில்லை. 2023-24 சீசனுக்கான மத்திய ஒப்பந்தங்களில் இருந்து இஷான் கிஷன் , ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு மீண்டும் அணிக்கு திரும்பினர். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயரை ஒப்பந்தத்தில் சேர்த்த பிசிசிஐ, இஷான் கிஷனை இன்னும் இணைக்கவில்லை.
