மகனை பார்க்க சென்றபோது சோகம் கால்வாயில் கார் கவிழ்ந்து பெண் பலி

திருமலை : தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் திரிபுராராம் மண்டலத்தில் உள்ள கம்பசாகர் கிராமத்தை சேர்ந்தவர் புல்லையா (63), மளிகை கடை வியாபாரி. இவரது மனைவி பத்மா (55). தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் புல்லையா தம்பதி பைக்கில் சென்றபோது ​துங்காபஹாட் பகுதியில் எதிரே வந்த கார் மோதியது.

இதில், பத்மாவுக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. சில நாட்கள் ஐதராபாத்தில் சிகிச்சை பெற்ற பிறகு, மிரியாலகுடாவில் உள்ள அவர்களின் இளைய மகனின் வீட்டில் தங்கி வசித்து வந்தனர். இந்நிலையில் மகனை பார்ப்பதற்காக நேற்று தம்பதி இருவரும் காரில் சென்றனர்.

காரை ரசூல் என்பவர் ஓட்டினார். நிடமனூர் மண்டலம் முகுந்தபுரம் வழியாக சென்றபோது டிரைவரின் காலணி நழுவியதாக கூறப்படுகிறது. இதனை அவர் சரிசெய்ய முயன்றபோது ஆக்ஸிலரேட்டரில் அழுத்தப்பட்டு கட்டுப்பாட்டை இழந்து கார் வேமாக சென்று அருகில் இருந்த நாகார்ஜுனசாகரின் இடது கால்வாயில் கவிழ்ந்தது. கண் இமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்தது.

இதைக்கண்ட கரையோர பகுதி மக்கள் விரைந்து சென்று மீட்க முயன்றனர். ஆனால் புல்லையா ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர். டிரைவர் நீச்சல் அடித்து கரையை அடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிரேன் உதவியுடன் காரை மீட்டனர். அதற்குள் காரில் மூழ்கி பத்மா இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட புல்லையாவை தேடிவருகின்றனர்.

Related Stories: