ஆளுங்கட்சி பேரணிக்கு பதிலடி சாலையை மஞ்சள் நீர் ஊற்றி கழுவிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசார்

*திருப்பதியில் பரபரப்பு

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத விவகாரம் தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரசை கண்டித்து நேற்று எம்எல்ஏ ஆரணி ஸ்ரீனிவாசலு மற்றும் ஜனசேனா கட்சியினர் பேரணி நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்கள் பேரணி நடத்திய பாதையில் நேற்று மாலை ஒய்எஸ்ஆர் காங்கிரசார் மஞ்சள் நீர் ஊற்றி கழுவும் போராட்டம் நடத்தினர். இதில் நகரத் தலைவர் மல்லம் ரவிச்சந்திர ரெட்டி, கவுன்சிலர்கள் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரசார் கூறுகையில், `திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயார் செய்ய பயன்படுத்தப்பட்ட நெய் குறித்து உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சி.பி.ஐ. எஸ்.ஐ.டி. விசாரணையில் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

ஆனால் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் தங்கள் கட்சியினரும் பொய்யான பிரச்சாரத்தைப் பரப்பி வருகின்றனர்.

திருப்பதி எம்.எல்.ஏ. ஆரணி ஸ்ரீனிவாசுலு மற்றும் ஜனசேனா கட்சி தலைவர்கள் இஸ்கான் கோயிலில் இருந்து அலிபிரி வரை பாதயாத்திரை நடத்தி நெய் கலப்படம் எனக்கூறி பேரணி மேற்கொண்டனர். இந்த பொய் பிரச்சாரத்தால் அந்தப் பகுதி மாசுபட்டுள்ளது. எனவே எங்கள் கட்சி (ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார்) சார்பில் மஞ்சன் நீர் ஊற்றி சுத்தம் செய்யும் போராட்டம் நடத்தினோம். இவ்வாறு கூறினர்.

Related Stories: