திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்புள்ள 240 ஏக்கர் நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்புள்ள 240 ஏக்கர் நிலங்கள், அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது. இதனால், 100 ஆண்டு கால இழுபறிக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயில் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இக்கோயிலின் முதல் ஆதீனம் சிதம்பர சுவாமிகளுக்கு ஆற்காடு நவாப் திருப்போரூர், தண்டலம் கிராமங்களில் சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் திருப்போரூர் கிராமத்தையே தானமான அளித்ததாக செப்பு பட்டயம் உள்ளது. தொடர்ச்சியாக வந்த கோயிலின் ஆதீனங்கள், கோயிலுக்கு பணியாற்றிய குருக்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், விளக்கு ஏற்றியவர் என பலருக்கும், அவர்களின் குடும்ப சூழ்நிலை கருதி 21 வகையான மான்யங்களை வழங்கினர். இவ்வாறு, வழங்கியது போக சுமார் 460 ஏக்கர் நிலங்கள், தற்போது கந்தசாமி கோயில் பெயரில் வருவாய்த்துறை பட்டா தாக்கலாகி உள்ளது.

அப்போதைய ஆதீனங்கள், சம்மதத்துடன் விவசாய நிலங்கள் உள்ளூர் விவசாயிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தனி நபர்கள் இடத்தில் இருப்பதாகவும், அவற்றை மீட்டு கோயில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகந்நாத் என்பவர், கடந்த 2020ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதுகுறித்து, பல வருடங்களாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நிலங்களை தனி நபர்களிடமிருந்து மீட்க வேண்டும் என்று 2023ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பல்வேறு காரணங்களாலும், பொதுமக்கள் எதிர்ப்பாலும் இப்பணி தாமதமானது. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 21 நாட்களுக்குள் கோயில் நிலங்களை மீட்டு வருகிற 10ம் தேதி அறநிலையத்துறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, கடந்த 30ம்தேதி அறநிலையத்துறை மற்றும் போலீசார் இணைந்து, விவசாய நிலங்களில் கோயில் பெயர் பலகை மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகை நடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அறிவிப்பு பலகைகளை அடித்து நொறுக்கினர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒரு வார கால அவகாசம் அளிப்பது என்றும் அதற்கு நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற்றுக் கொள்ளலாம் என்றும், தவறினால் பிப்.7ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகள் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த மனு விசாரணைக்கு வராத நிலையில், நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், மா.கம்யூ கட்சியினர், பொதுமக்கள் இப்பிரச்னையில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும் என்று கூறி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக, அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரதுரை, உதவி ஆணையர்கள் ராஜலட்சுமி, கார்த்திகேயன், செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் அடங்கிய குழுவினரும், பல்வேறு கோயில்களில் இருந்து அறநிலையத்துறை ஊழியர்களும் வரவழைக்கப்பட்டனர். மேலும், திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கிய குழுவினரும் வந்திருந்தனர். மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி அறிவழகன், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், காயார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருதப்பன் அடங்கிய 200க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதிகாலை 5.30 மணி முதல் கோயிலுக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட புல எண்களில் அடங்கிய 229 ஏக்கர் 92 சென்ட் நிலங்கள் மீட்கப்பட்டு, 19 இடங்களில் கோயில் பெயர் பலகையும், எச்சரிக்கை பலகையும் நடப்பட்டது. இதன் மூலம், ரூ.700 கோடி மதிப்புள்ள 230 ஏக்கர் விவசாய நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும், 100 ஆண்டு கால இழுபறிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குத்தகை செலுத்த உத்தரவு
மீட்கப்பட்டுள்ள விவசாய நிலங்களில் பயிர் செய்வோர் தொடர்ந்து பயிர் செய்துக் கொள்ளலாம் என்றும், கோயில் தரப்பில் அவர்களை குத்தகைதாரராக பதிவு செய்து குறைந்தபட்ச தொகை வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளோர், தாங்களாகவே முன்வந்து கோயிலுக்கு குத்தகை தொகையை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: