சென்னை: திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என ஒப்பந்தம் கையெழுத்தானது. டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீடு குழு, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதில் திமுக கூட்டணியில் இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு மூன்று இடங்கள் ஒதுக்கிய நிலையில் இந்த தேர்தலில் இரண்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் இம்முறையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;
நடைபெற உள்ள 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் இன்று (13-03-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழ்நாட்டில் 2 சட்டமன்றத் தொகுதிகளில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது என கூறப்பட்டுள்ளது.
