காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு மற்றும் வாலாஜாபாத் பாலாற்றின் குறுக்கே போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி அரசு ஒப்புதல் கிடைத்ததும் ஓரிரு வாரங்களில் தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்றின் குறுக்கே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தின் வழியாக செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை, வந்தவாசி, திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், புஞ்சை அரசன்தாங்கல், அப்துல்லாபுரம், தூசி, மாமண்டூர், நத்தக்கொல்லை, பல்லாவரம், அய்யங்கார்குளம், வெம்பாக்கம், கோளிவாக்கம் கூழமந்தல், ஆக்கூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், நெசவாளர்கள் மருத்துவம், கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பணிகளுக்கும் காஞ்சிபுரத்தை நம்பியே உள்ளதால் அதிகளவில் டூவீலர்களில் வந்து செல்கின்றனர்.
காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை, மாங்கால் கூட்டு சாலையில் சிப்காட் அமைந்துள்ளது. இங்கு, எண்ணற்ற பன்னாட்டு, உள்நாட்டு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள், கனரக வாகனங்கள் அதிகளவில் இந்த மேம்பாலத்தை கடந்து செல்ல வேண்டும். இதனால், பாலாற்று பாலத்தில் இருந்து கீழம்பி வரையில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் புறவழிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக பேருந்துகள், கனரக வாகனங்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இந்த, மேம்பாலம் மற்றும் பாலத்தையொட்டி புறவழிச்சாலை பிரியும் சந்திப்பு ஆகிய இடங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், கூடுதலாக மேலும் ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், பாலாற்று மேம்பாலத்தில் புதிதாக மேம்பாலம் கட்ட 885 மீட்டர் தொலைவுக்கு ரூ.60 கோடி நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக, மண் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் ஒப்புதல் கிடைத்ததும், ஓரிரு வாரங்களில் மேம்பாலப் பணிகள் தொடங்கும் என தெரிவித்துள்னர். இந்த மேம்பாலம் தற்போது புழக்கத்தில் உள்ள மேம்பாலம் மற்றும் ஏற்கனவே சேதமடைந்த தரைப்பாலம் பகுதிக்கு இடையில் அமைய உள்ளது. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதி பாலாற்றில் மேம்பாலம் ரூ.75 கோடி திட்ட மதிப்பீட்டில் 740 மீ. தொலைவுக்கு அமைக்கப்படுகிறது. இந்த மேம்பால பணியும் அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஓரிரு வாரங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
